Tuesday 17 January 2012

கடவுளாய் நீயே.....

அந்தியிலும் அதற்கு முந்தியிலும்
வந்து போகும் நினைவுகளில் - நீ
மட்டுமே கடந்து செல்கின்றாய்...!

காலத்தின் தடங்கள் கருமையாய்
படர்ந்திருந்தபோதும் - உனது
ஞாலத்தின் பாதையில் அதை
பசுமையாய் படரச்செய்கின்றாய்...!

எத்தனையோ பகலையும் இரவையும்

சுருக்கி வைத்த எனது மனதிற்கு
உனது கவிதைகளையே
பரிசளித்து பரவசமடையச்செய்கின்றாய்...!

கடந்து சென்ற இறந்தகாலத்தை

கடவுளிடம் ஒப்படைத்தால்
நீயில்லா நிகழ்காலத்தை - எனக்கு
ஒப்படைத்து வக்கனையாய் சிரிக்கின்றார்!

உன் ஒப்புவித்தலைத்தான்

எனக்கு ஒப்படைத்திருக்கிறார்
என்பதை அறிய அதீதமாகவில்லை
காரணம் அவர் உன் கடவுள்!

நிகழ்காலம் நிதானமிழந்து நிற்க

எதிர்காலமோ தீக்கிரையாகி திகைக்கிறது!

அடர்ந்து விரிந்திருக்கும் இருளில்

எனது எண்ணத்தின் கொள்ளளவு
உனது வதனத்தின் அணுக்கள் வரை!

தொலைந்த வாழ்க்கையை

கலைந்து போன கனவுகளுடன்
நான் மீட்டித்தருகின்றேன் என்று நீ
சொல்லிச் சென்ற அந்த இரவை
தேடியே தேய்ந்து போகின்றேன்!

காதலின் விலை கண்ணீர்தான்

என்று தெரிந்த எனக்கு
காமத்தின் விலை தெரியவில்லை!

உன்னோடு கோயிலின் பிரகாரத்தை

சுற்றிவந்த அந்த அற்புதநாளை மட்டுமே
மனம் அசைபோட்டுப் பார்க்கிறது...

எத்தனையோ தத்துவங்கள் சொன்னாய்

எத்தனையோ வரலாறுகளை
விரலிடுக்கில் விவரித்தாய்.... - நீ
அமர்ந்து தியானித்த இடத்தில்
உன் தடயத்தைத் தேடி நானும்
அமர்கின்றேன் தியானிப்பின் முன்பே
கடவுளாய் நீயே அவதரிக்கின்றாய்.!

பிடிவாதமான உனது மௌனம்

மறுபடியும் மனதிற்குள் நிழலாட
என் தியானமும் அலைக்கழிக்கப்படுகிறது!