Tuesday 5 November 2013

இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?

இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.நேற்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.

இசைப்பிரியா கொடுமையான முறையில் வல்லுறவுக்குட்படுத்த பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சனல்௪ வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில் இசைப்பிரியா மேலாடைகள் அற்ற நிலையில் சதுப்பு நிலமொன்றில் இருக்கின்றார். அவரை படையினர் இழுத்து வருகின்றனர். மேலாடை அற்ற நிலையில் அவர் வர மறுத்த போது வெள்ளைத் துணி ஒன்றினால் அவரின் உடம்பை மறைத்து அவரை அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வெறுமனே உள்ளாடை மட்டும் அணிந்த ஒரு நபர் காணப்படுகின்றார். யுத்த களத்தில் படையினன் ஒருவன் வெறுமனே உள்ளாடையுடன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், குறித்த நபர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த களமிறக்கப்பட்ட அணியினனாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. உலகில் யுத்தம் நடைபெறுகின்ற பல நாடுகளில் ஒரு இனத்தை அடக்கியொடுக்குவதற்கு பாலியல் வல்லுறவு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சிறிலங்காவிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்றுறவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரை உடனடியாகத் தலையிடுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதன் மூலமே சர்வதேச நாடுகளின் நேர்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும்.

நன்றி - அதிர்வு