Sunday 6 May 2012

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: புராணம் கூறும் அக்னி நட்சத்திரத்தின் பிறப்பு!

அக்னி நட்சத்திரம்  ஆரம்பம்: புராணம் கூறும் அக்னி நட்சத்திரத்தின் பிறப்பு!



அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சூரியன் மேஷராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உச்சபலத்தைப் பெறுகிறார். அதனால், சூரியனின் கிரணங்கள் மிகுந்த ஆற்றலோடு பூமியை வந்தடைகின்றன. இதை அக்னி நட்சத்திர காலம் என்று பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன.

கிராமப்புறங்களில் "முன்னேழு பின்னேழு நாட்களான சித்திரையின் கடைசி ஏழு நாட்களும், வைகாசியின் முதல் ஏழுநாட்களுமாக, 14 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்று சொல்வர். மே 4 காலை 6.59 மணிக்கு துவங்கும் அக்னி நட்சத்திரம், 28 இரவு 1.50க்கு முடிகிறது. இக்காலகட்டத்தில் அம்மை, வேனல்கட்டி போன்ற உஷ்ண வியாதிகள், தோல்நோய்கள் தலைகாட்டும் அபாயம் உண்டு. நீர்மோர், இளநீர், பானகம், நுங்கு, வெள்ளரி ஆகிய குளிர்ச்சி தரும் உணவு வகைகளையும், பழங்களையும் சாப்பிடுவது நன்மை தரும்.


புராணக்கதை: முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம்  அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது