Tuesday 21 August 2012

மாமரம் சொல்லும் தத்துவம் - காஞ்சி பெரியவர்


*
பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழிவழியாக பல மரங்கள் வளரும்.

* இதைப்போலவே உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நல்லவர்களாகவும், இறைபக்தி கொண்டு முழுமையடைந்தவர்களாகவும் இருப்பதில்லை. ஏதாவது, ஒருசிலர்தான் அத்தகைய மேன்மையான நிலையை அடைகிறார்கள். இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு விதையால் பல மாமரங்கள் உருவாவதைப்போல, அந்த ஒருவரால், பல நல்ல ஆன்மா உடையவர்கள் உருவாவார்கள்.

*
உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் ஒருவர் அடையும் நன்மையும்  அனைவருக்கும் கிடைத்ததாகிறது.