Monday 13 May 2013

சில நேரங்களில் சில சிந்தனைகள்

மனித சமுதாயம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. பத்திரிகைகளை புரட்டவே ஒரு இனம் புரியாத அச்ச உணர்வு பரவுகிறது. மருத்துவ கல்லூரி பெண் வன்புணர்வு செய்யப்பட்டு அது உலகையே புரட்டி போட்ட வெகு சில வாரங்களிலேயே 5 வயது பெண்னை ஒருவன் வன்புணர்வு செய்துள்ளானாம். அதுவும் அந்த குழந்தை வசிக்கும் வீட்டின் கீழ்தளத்திலேயே இருந்துக் கொண்டு, இரண்டு மூன்று நாட்களாய் அதை பல விதங்களில் விவரிக்க முடியாத வகையில், அந்த கிராதகன் நாசம் செய்திருக்கிறான்.

இவனை போன்ற காமச் சண்டாளர்களை கடுமையான சட்டங்கள் இயற்றி, துன்புறுத்தி, இவன் ஆண்மையை அழிக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

மனிதர்களால் எப்படி இத்தனை கீழ்நிலைக்கு செல்ல முடிகிறது ? அதுவும் பண்பாடும், நாகரீகமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழக்கப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் ?

பெண்ணை அவள் ஒப்புதல் இல்லாமல் தூக்கி சென்று சிறை வைத்தவனை அழிப்பதற்காகவும், அவளை மீட்பதற்காகவும் ஒரு யுத்தமே நடந்த இதிகாசங்கள் உள்ளனவே ?

"பிறன் மனை நோக்கா பேராண்மை" என்று ஆண்மைக்கு விளக்கம் சொன்ன நம் அற்புதமான‌ பாரம்பரியங்கள் எங்கே அடகுக்கு வைக்கப்பட்டுள்ளன ?

அத்தனை ஆளுமையும் கொண்ட அரசர்கள் கூட பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக தூக்கி சென்று வன்புணர்வு செய்ததாய் சரித்திரம் இல்லையே ?

இந்த தேசம் எப்போது மாறத் தொடங்கியது ? நம் மனிதர்கள் எப்போது மிருகங்களாக மாறத் தொடங்கினர் ?

இருப்பது ஒரு வாழ்வு, அதில் கூடியமட்டும் புலன் இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள் எனும் மேற்கத்திய காட்டு சித்தாந்தம் தானே நம் நாட்டையும் இப்போது பற்றி வருகிறது ? நல்ல மத நெறிகள் இல்லாத விஞ்ஞானம் முடமானது என்றாரே ஐன்ஸ்டியன், அதுபோல முடமாய் போன ஒரு விஞ்ஞான உலகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?

உலகுக்கே ஆண்மீக விளக்காய், ஞானச் சுடராய் இருந்த பாரதம் இன்று வன்புணர்வு தேசமாக மாறிவருவது எதனால் ?
எல்லாம் நன்றாய் இருக்கட்டும், எல்லாம் பாதுகாப்பாய் இருக்கட்டும், சத்தியமற்ற தன்மையிலிருந்து சத்தியத்தை நோக்கி செல்வோம், இருளிலிருந்து மீண்டு விழிப்புணர்வு நிலையை நோக்கிச் செல்வோம், அழிவிலிருந்து அழிவில்லா தன்மையை நோக்கி செல்வோம் என்று உரைத்த உபநிடந்தங்களின் வரிகளுக்கு நாம் முரனாக அல்லவா சென்று கொண்டிருக்கிறோம் ?

பணம் பணத்தை தவிர எதுவுமே இல்லை எனும் குறிக்கோலோடு பெரும்பாலான ஊடகங்கள், திரைப்படங்கள், கடமையை சரியாக செய்யாத தனிக்கை அதிகாரிகள், அரசாங்கம் என்று எல்லாமே தரம் தாழ்ந்து போய்விட்டனவே ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் காம வெறியை நம் மனதுக்குள் செலுதியவாறே இருக்கிறார்களே இந்த கயவர்கள்.

பெரும்பாலான திரைப்படங்களின் தரம், ஊறரிந்தது, நாம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சியில் ? குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு நடுவே வரும் விளம்பரங்கள் எப்படி உள்ளது ?

நம் முன்னோர்கள் காமத்தை கடந்துவிடு என்று சொன்னார்களே தவிர காமத்தை அடக்கிவிடு என்று சொல்லவில்லை.
காமத்தை கடப்பதற்கு நல்ல சிந்தனைகளை நோக்கி நம் மனத்தை திசை திருப்பி விடுதலே சிறந்தது.

இன்று வாஸ்து, எண் ஜோதிடம், ஜாதகம், ராசிக் கல் மோதிரம் என பல விடயங்கள் பெரும் வியாபாரமாக போய்விட்டன.
இந்த கலைகளுக்குள் பல உண்மைகள் இருந்தாலும், இவை ஒரு அடிப்படை சித்தந்தத்தை அழித்து விட முடியாது.
குறுக்கு வழியில் சென்று நம் எதிர்காலத்தை சத்தியமாக யாராலும் மாற்றிக் கொள்ள முடியாது.

செய்யும் வினையை ஒட்டியே எல்லாம் நடக்கிறது எனும் நம் தேசத்தின் தலை சிறந்த தர்மத்தை நாம் விஞ்ஞானத்தின் ஆளுமையில் நமக்கே அறியாமல் நிராகரிக்க தொடங்கி விட்டோம். "இன்றைய செயலால் நாளைய விதியை நிரமானிக்கின்றாய்" என்றார் விவேகானந்தர். இது சத்திய வாக்கு.

ஒருவன் செய்த கர்மத்திற்கு (செயலிற்கு) உண்டான பலனை அவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதில் நான் தலையிடுவதில்லை என்கிறான் கீதையில் கிருஷ்ணன். ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த அடிப்படை உண்மையை நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்வதுடனும், மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதுதான்.

ஆயிரம் நீதிமன்றங்களிலிருந்து நாம் தப்பி விடலாம் ஆனால் ஆண்டவனிடமிருந்து தப்ப முடியாது