Saturday 28 December 2013

மரணம் பற்றிய மா்மங்கள்



உடலும் உயிரும்

நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன. அவற்றை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. குண சரீரம் 4. கஞ்சுக சரீரம் 5. காரண சரீரம் என்பா். இவற்றை 1. அன்னமய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும் சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள்.

1. அன்னமய கோசம்
நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது! பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள்.

2. பிராணமய கோசம்
வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம்.

3. மனோமய கோசம்
ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும்.

பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும்.

4. விஞ்ஞானமய கோசம்
ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும்.

5. ஆனந்தமய கோசம்
பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும்.

யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள்.

வேதாந்திகள் சொல்வது

மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து.

தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம்

காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம்.

விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை.

மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது.

உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை!

அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம்.

எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம்.

மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம்.

மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான்.

கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான்.

ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான்.

கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது.

காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா்.

சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா்.

தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா்

மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது.

அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது.

சூக்கும சரீரம் – விளக்கம்

தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலைஅடிகள்.

ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது. அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அவா்.

அருள்திரு அடிகளார் அனுபவம்

ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள்.

அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன. சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது.

இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு.

புலவா் சொக்கலிங்கம் அனுபவம்

ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார்.

“ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்தபோது என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது. எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான். அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது. இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி! இது சற்றே வித்தியாசமான அனுபவம்” என்றார்.

பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும்.

இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார்.

இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள்.

இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள்.

உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள்.

இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.
fax:
your@email.com
http://www.yoursite.com