Monday 21 January 2019

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எதற்காக விடப்படுகிறது தெரியுமா?

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எதற்காக விடப்படுகிறது தெரியுமா?


விடுமுறை வேண்டும்!

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எதற்காக விடப்படுகிறது என்ற நோக்கமே இன்று யாருக்கும் தெரிவதில்லை. மதிப்பெண்தான் ஒரே உச்சபட்ச நோக்கமென அரசும், பெற்றோரும், மாணவ/ மாணவிகளும், ஆசிரியர்களும் முடிவெடுத்து செயல்படுவதன் விளைவு ஓர் உயர்ந்த அறிவார்ந்த சமூகமான தமிழ்ச்சமூகம், தனது வாழ்வியலின் அடிப்படையான நடைமுறைகளில் இருந்தும், பெரும் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.

உலகின் பல வல்லரசு நாடுகளிலும், அந்த அரசுகள் கல்வியின் மீதும், கற்பவர் மீதும் இவ்வளவு அழுத்தங்களை ஒருபோதும் உண்டாக்குவதில்லை. கற்பது என்பது ஓர் எளிய பழக்கமாகவே பின்பற்றப்படுகின்றது. பெரும்பாலும் வகுப்பறைகள் அந்நாடுகளின் மாணவ/மாணவியரின் படைப்பு ஆற்றலை நசுக்குவதில்லை. அவரவர் திறமையை ஆய்ந்து அறிவதுதான் ஆசிரியர்களின் வேலையாக இதுவரையிலும் இருந்து வருகின்றது.

இந்திய கல்விச் சூழலில்தான் ஏராளமான முரண்கள் நிலவுகின்றன. திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, மனனம் செய்வதே ஒரே உயர்ந்த திறமை என்ற மனநிலையை எல்லா குழந்தைகள் மனதிலும் திணித்துவிட்டனர். நுணுகி ஆராய்ந்து பொருள் அறிந்து படித்தல் என்பதே இன்று வழக்கத்திலேயே இல்லை. மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு ஸ்கேனர்கள் போல வாழப்பழகிவிட்டனர். 'ஈ அடிச்சான் காப்பி' என்று எங்கள் பகுதிகளில் சொலவடை சொல்வார்கள். அவ்வரிகளை உண்மையாக்குவதே, இன்றைய தனியார் பள்ளி, கல்லூரிகளின் வேலையாக இருக்கின்றது.

இதன் விளைவாக தமிழகத்தில் படைப்பாற்றல் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. இச்சூழலானது, தமிழர்களின் படைப்பாற்றலை மட்டும் சிதைத்து இருந்தால் கூட நாம் கடந்துச் சென்று இருக்கலாம், தமிழர்களின் மரபார்ந்த வாழ்வியலின் மீதே பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா முன்னணி பள்ளி, கல்லூரிகளும் பொதுவிடுமுறை நாள்களில் கூட வகுப்புகளை நடத்துகின்றனர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களை இறுதி தேர்வின் முடிவில் காட்டியாக வேண்டியச் சூழல் நிலவுவதாலும், கடும் வியாபார போட்டியின் காரணமாகவும் விடுமுறை என்பதே இல்லை என்ற சூழலை தனியார் பள்ளி, கல்லூரிகள் உருவாக்கிவிட்டன.

அரசு தீர்மானிக்கும் வருகை நாள்களைவிட, அதிக நாள்கள் வகுப்புகள் நடந்தாலும், ஒரு பள்ளி, கல்லூரியில் கூட ஆய்வகம் சார்ந்த எந்த பாடமும் நடத்தப்படுவதும் இல்லை. ஆய்வகம் என்ற ஒன்றே பல பள்ளி, கல்லூரிகளில் இல்லை. ஆய்வகம் இருக்கும் சில தனியார் நிறுவனங்களிலும் சரியான கருவிகள் கிடையாது. எல்லா நாள்களும் மன்னம் செய்வது மட்டுமே மாணவ/மாணவியரின் ஒரே தலையாயக் கடமையாக மாறிவிட்டது.


ஒரு தாத்தா பாட்டியின் மரணம்; ஓர் உறவினரின் வீட்டுத் திருமணம்; எந்த குடும்ப விழாக்களிலும் இளம் தலைமுறைப் பிள்ளைகள் பங்கெடுத்துக் கொள்வது இல்லை. விளைவு ‘கூடி வாழ்தல்' என்ற மரபார்ந்த வாழ்வியலை நமது அடுத்த தலைமுறை இழக்கத் தொடங்கிவிட்டது. இது சாதாரணமாக கடந்துச் செல்ல வேண்டிய விசயமில்லை.

இன்றைய குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை மாமன், பங்காளி குடும்பம் போன்ற எந்த உறவுகள் சார்ந்த அறிவும், உறவு முறைப் பெயர்களும்கூடத் தெரிவதில்லை.

உறவிகளின் மீதான பிணைப்பும், சமூகத்தின் மீதான அக்கறையும், பெரியவர்களை மதிக்கும் பண்பும், பிறரோடு இணங்கி வாழ்வதலும் போன்ற எந்த உயர் குணநலன்களையும் நம் இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்வதே இல்லை.

ஓர் இனக்குழுவை அடிமைப்படுத்த நினைக்கின்ற எல்லா வல்லாதிக்க அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அந்த இனக்குழுவைத் தனித்தனி அமைப்புகளாக, தனித்தனி குடும்பமாக, தனித்தனி மனிதர்களாக உடைப்பதையே தங்களின் அடிப்படை தாரக மந்திரமாக வைத்திருக்கின்றன. உலகின் ஆதித் தொல்குடியினமாக இன்னும் நீடித்து இந்த பூமியில் வாழ்கின்ற தமிழர்களையும் தனித்தனியாகச் சிதைப்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.

அதற்குத்தான், இந்த விடுமுறைகள் இல்லாத கொடூரமான கல்விமுறைப் இந்நிலத்தில் பின்பற்றப்படுகிறது. உளவியலாக ஒவ்வொரு மாணவ/மாணவியருக்குள்ளும் இருக்கும் குடும்பத்தின் மீதான, உறவுகளின் மீதான, சமூகத்தின் மீதான, நாட்டின் மீதான பற்றையும் அழித்து, அவர்களை தனிமனித வெற்றியே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்று எண்ணுகின்ற சூழலை இவர்கள் உருவாக்கிவிட்டனர்.

உலகின் பல நாடுகளிலும் வீட்டில் இருந்தே தேர்வு எழுதுகின்ற நடைமுறை உள்ளது. தமிழ்நாட்டில் கூட தனித்தேர்வர் முறை உள்ளது. உயர் கல்விகளில் தொலைத்தூர கல்வி முறையும் உள்ளது. இவற்றை எல்லாம் பின்பற்றி, தனிமனிதனாக இங்கு யார் வேண்டுமானாலும் கற்றுத் தேர்ந்து சாதிக்க முடியும். ஆனாலும் அந்த நடைமுடைகளை ஒருவரும் கற்றுத் தருவதல்லை. காரணம், அந்த நடைமுறைகள் குறித்தான அறிவினை மக்கள் பெற்றால், கல்வியை எந்தவிதமான  உயர்மன அழுத்தமும் இன்றி பெற முடியும் என்பதை அனைவரும் உணர்ந்துவிடுவர்.

அப்படி, மக்கள் விழிப்புணர்வை அடைந்துவிட்டால், தனியார் பள்ளி, கல்லூரிகள் கொள்ளை அடிக்க முடியாமல், இழுத்து மூட வேண்டிய சூழல் வரும் என்பதை எல்லோரும் நன்கு அறிவர்.

தானாக, தன்னெழுச்சியாக ஒருவர் படித்து பட்டம் பெற்று, தன் சொந்தக் காலில் நின்று வாழ்ந்து காட்டிவிட்டால் போதும், தனியார் கல்வி நிறுவனங்கள் தலையில் முக்காடுப் போடுகின்ற நிலை வந்துவிடும்.

சுயமாக, தற்சார்பாக, தன் சொந்தக் காலில் தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று வாழ்கின்ற உயர்ந்த உளவியலை, விடுமுறை இல்லாத வகுப்புகள் உருவாக்க தவறுகின்றன...

விடுமுறைகள்தான், உணர்வு சார்ந்த, உறவு சார்ந்த அறிவையும் புரிதலையும், நம்பிக்கைகளையும் உருவாக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கித் தரும்...

விடுமுறையைக் கொண்டாடுங்கள் குழந்தைகளே...
அவர்களைக் கொண்டாட விடுங்கள் பெற்றோர்களே...

Best regards,