Thursday 9 May 2019

''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..''?

''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..''?
...........................................

உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடி அலை கின்றான்.

இதில் கிடைத்துவிடாதா அதில் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான்.

இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே.
மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து
வாங்கக் கூடிய பொருளோ, இடமோ அல்ல.
இது ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது.

இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்து கொள்கின்றானோ,அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவிந்து கிடந்தன.ஆனால்,மகிழ்ச்சியும், நிம்மதியும்தான் இல்லை.

உள்ளூர்லதான் மகிழ்ச்சி கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்கும் என்று எண்ணி அதைத் தேடிப்போனான்…

ம்ஹூம் அங்கேயும் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு…

எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. பணப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடு வாங்களோங்கிற சந்தேகம்!

இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான்.

ஆனா ,அதிலும் நிம்மதி கிடைக்கல…சீ போதும் இந்த வாழ்க்கை…இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம் அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்க முடிவு செய்தான்..

அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம்,எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்து  இருந்தார்.

அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன்,அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு,

“குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு.இனி இவை எதுவும் எனக்கு வேணாம்.எனக்கு அமைதியும், மகிச்சியும்தான் வேணும்…அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…, என்று சொல்லி அவரை கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி,

உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார். அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக் கட்டா பணமும் இருந்தது…

துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி.

‘அடடா..இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான்.கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார்.தாவிக் குதிக்கிறார்…

ம்ஹூம். பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல.ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

என்னப்பா பயந்துட்டியா…இந்தா உன் சொத்து மூட்டை…நீயே வச்சுக்க என்று திருப்பிக் கொடுத்தார். சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

ஒரே குதூகலமாயிட்டான்.முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா…புதுசா சிரிக்கிற…இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி உங்கிட்டதானே

ஆனால் ,அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல…இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான்.ஆனா மகிழ்ச்சியும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!”என்று கூறி விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

ஆம்.,நண்பர்களே.,

மகிழ்ச்சியை வேறு எங்கும் தேட வேண்டாம் அது நம்மிடத்தில்தான் இருக்கிறது.


Best regards,