Sunday 14 July 2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

அரசியல்நாகரிகத்தின் ஆண்டவனே - பல
அணைகளைகட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை
எடுத்ததால் எமனும் கெட்டவனே ...

கல்விக்கண்ணை திறந்துவைத்து - நீர்
கண்மூடி போனதென்ன
காணிநிலம் கூடயின்றி - நீர்
கடைசிவரை வாழ்ந்ததென்ன ...

ஆண்டவனே வந்தாலும் - உம்போல்
ஆளமுடியுமா தெரியலியே
மாண்டவனே உமையெழுப்பி - மீண்டும்
ஆளச்சொல்ல வழியில்லையே ...

பெரும்தலைவா கர்மவீரா - உமை
காணாதது என்பாவம்
பிறந்தநாளில்கூட வாழ்த்தாவிட்டால் - பிடிக்கும்
தமிழ் இனத்திற்கே பெரும்சாபம் ...

இவ்வுலகம் இருக்கும்வரை - ஐயா
உம்உருவம் நிலைத்துநிற்கும்
நீர்போட்ட கல்விப்பிச்சையில் - தான்யா
தமிழ் இனமே பிழைத்துநிற்கும் ...

கர்மவீரரே
காமராஜரே
நீ படித்தது ஆறு
இப்போது உனக்கு வயது நூற்று பதினைந்து?

பிறந்த போது
நீயும் அழுதாய்
பாலுக்காக அல்ல…
பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசத்தைப் பார்த்து!

உன் வீட்டு
அடுப்பில் நெருப்பில்லை
நெஞ்சில் மட்டும்
விடுதலை நெருப்பு!;
மூவாயிரம் நாள்கள்
சிறைக் கம்பிக்குள் வாசம்…

உன் நினைவெல்லாம்
இந்திய தேசம்!
பதவியைத் தேடி
பலபேர் வந்தார்கள்
உன்னை நாடி…
உனக்காக
எவரையும் நாடியதில்லை.
நீதான்
”நாடா” ராயிற்றே
நீ எந்தப் பக்கமும்
சாய்ந்த தில்லை...

சின்ன வயதிலேயே
சரியாக தராசைப் பிடித்திருந்ததால்!
பெரியாரின் பல்கலைக் கழகத்தில்
”பச்சைத் தமிழர்”'
பட்டம் பெற்றாய்…
உன் கொச்சைத்
தமிழால்
எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய்...

படிக்காத மேதையே
தடுக்கி விழுந்தால்
தொடக்கப் பள்ளி
ஓடி விழுந்தால்
உயர்நிலைப் பள்ளி
சாலைகள் எங்கும்
கல்விச் சாலைகள் திறந்தாய்…

அரியாசனத்தின் மீது
ஆசையில்லை….
உன் ஆசையெல்லாம்
”அறியா” சனங்களின் மீது?

இந்தியாவே
உன்னிடம் இருந்தது
நீ இருந்தபோது…
சட்டைப் பை
காலியாகவே இருந்தது
நீ இறந்தபோது!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

Best regards,