Wednesday 31 July 2019

ஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை..... டிரெய்னிங்ல வாங்குற மார்க்தான் முக்கியம்....

ஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை..... டிரெய்னிங்ல வாங்குற மார்க்தான் முக்கியம்....

அய்யோ... இது பெரிய பிரச்சனையாச்சே... மத்திய அரசு ஏன் இப்படி செய்கிறது...

ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க சொல்லி வலியுறுத்துவதால்....புதிதாக பிரச்சனைகளை கிளப்பிவிடுறாங்க....நீங்க இந்த பிரச்சனைய தீர்க்கனும்னு குரல் கொடுப்பீங்களா? அல்லது ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள பேசுவீங்களா?

ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளின் ரீவைண்டு...

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...?

1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது

அப்போது தேர்வு எழுதியவர்கள் யார்?

உயர் சாதிக்காரர்கள் (பிராமணர்கள்) மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.... அதனால் அவர்கள் மட்டுமே தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்....

இட ஒதுக்கீடு அப்போது இருந்ததா?

பெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் அவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக, அதற்கும் மேலாக ஆங்கிலம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் இருந்தார்கள்.....எனவே அந்த இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை...

1965 ல் என்ன நடந்தது?

ஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்...

அதன் விளைவு என்ன?

இந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது. இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை. பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது....

1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை.... ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது.  அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்...... மத்திய அரசு அடி பணிந்தது.... தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின....

ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்?

பெரும்பாலும் பிராமணர்களே....

பிறகு என்ன நடந்தது?

அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்... அவருக்கு ஆதரவாக காமராஜர் காங்கிரஸ் கட்சி சார்பில் "மாநில மொழிகளிலும்  ஐஏஎஸ் தேர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்ற செய்தார்....

அதன் விளைவு என்னவாக இருந்தது?

1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு. அந்த கமிட்டி 1978 ல்  "மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது. அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.

நல்ல விசயம் நடந்திருக்கே!!! அப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே!!!!! மகிழ்ச்சி.....

ரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....

என்ன சிக்கல் அது?

ஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்.

அப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது?

நிச்சயம் முடியாது!!!! அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும். இதற்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி..... ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடை எழுத முடியும். ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு.....

அப்படி என்றால் ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதலாம் என்று மக்கள் நம்புவது?

Preliminary தேர்வு தமிழில் நடக்குமா, மெயின் தேர்வு கேள்விகள் தமிழில் இருக்குமா என்றா மக்கள் கேள்வி கேட்பார்கள்...... அது தேர்வு எழுதுபவர்களின் பிரச்சினை. உதாரணமாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட போறாங்கன்னு சொன்னா முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? இல்ல தாமிரபரணி பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? நகரத்துல வசிப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிதாக படாது, ஆனால் ஏதோ உணர்வு மட்டும் இருக்கும்ல, அது மாதிரி ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவு வந்து, அதுல தமிழில் எழுதி பாசானால், அவர் புரோட்டா மாவு பிசைந்து ஐஏஎஸ் ஆனார், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படிப்பார், ஆடு மேய்த்து ஐஏஎஸ் ஆனார் என்று பத்திரிக்கையில் செய்தியை பார்த்துவிட்டு தமிழனாக பெருமைப்பட்டு உணர்வை வெளிப்படுத்துவோம்..... அவ்வளவுதான்....

அப்புறம், இது போல இந்த தேர்வில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறது??

70 வருசமா இட ஒதுக்கீடுனால இந்த நாடு முன்னேறாமல் போச்சு, இட ஒதுக்கீட்டால திறமையானவர்கள் அடிபட்டு போய்விடுகிறார்கள்....மெரிட் தான் முக்கியம் அப்படின்னு நம்ம நாட்டுல அடிக்கடி பேச்சு அடிபடும். அது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேச வைக்கும் உத்தி....

அப்படின்னா??????

ஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு என்பது 1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது..

அப்படின்னா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா?

ஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சுன்னு பேசுவாங்க..... அதான் வேடிக்கை.

ஆனால் இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா?

இது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது. மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்...

அப்படி என்றால்????????

மேல் சாதியினருக்கு அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது என்பது தான் உண்மை.

அது எப்படிங்க சொல்றீங்க?

மத்திய பணியாளர் நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்திய அரசு Group A பணிகளில் 13.02 சதவிகிதம்​ பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்​ 13.38 சதவிகிதம் பேரும், பழங்குடியினர் 5.92 சதவிகிதம் பேர் மட்டுமே உள்ளனர். இப்போ இது மூன்றையும் கூட்டினால் எவ்வளவு சதவிகிதம் வருகிறது....

மொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே வருகிறது....

அப்படின்னா உயர்சாதிக்கு நான் சொன்னது 50.05 சதவிகித இடஒதுக்கீடு என்பது தவறு, அரசு அறிக்கை படி 68 சதவிகிதம் இட ஒதுக்கீடு அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நமக்கு இன்னொரு கணக்கு சொல்வார்கள் அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் 21 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட மக்கள் 17 சதவிகிதமும், பழங்குடியினர் 8 சதவிகிதம் இருக்கிறது என்று...... அது எப்படி என்றால் Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்...அப்படி பார்த்தாலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். உயர்சாதியினர் 54 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்...

அப்படி பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர் பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்?

அதான் மேல இருக்கிறவங்க பிரச்சனை. அதை தடுப்பதற்காகத்தான்  நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்....

நிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்?

அதாவது பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28. அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்....... நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்

1. Y.K. Alagh Committee  (2001) - 26 வயது
2. P.C. Hota committee (2004) - 27 வயது
3. Administrative Reforms Commission (2008) - 28 வயது
4. B.S. Baswan committee (2016) - 29 வயது

இந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா? இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்...

அப்படி என்றால் நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா?

அங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.. இது தவிர இந்த பஸ்வான் கமிட்டி இன்னொரு பரிந்துரையும் வழங்கியுள்ளது..... அதாவது தமிழ் மொழி போன்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும் என்பது....

அடக்கொடுமையே, அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்?

நீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித்தால் சரியாக​ இருக்கும்....

அப்படி என்றால் பாஜக செய்வது மட்டுமே தவறு என்று சொல்கிறீர்களா?

நிச்சயம் இல்லை, மத்தியில் ஆண்ட  எல்லா அரசுகளும் இதனை செய்ய முயற்சிப்பார்கள்....... காரணம் ஒவ்வொரு துறையிலும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் உயர் சாதியினர் மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை..... ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலமைகளுக்கு ஆலோசனை வழங்குவது போல் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆலோசனை வழங்குவது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான "நிதி அயோக்"  Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

ஓ அப்படி என்றால் OBC, SC, ST மாணவர்கள் பதவிக்கு வருவதை தடுக்க இவ்வளவு வேலை நடக்கிறதா?

ஆமாம், இந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக Lateral entry முறையில் தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

தனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே?

அங்கே தான் பிரச்சனையே, யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும். ஆனால் Lateral entry மூலம் பணி வழங்கினால் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும்.  இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்.

அப்படி என்றால் நாம் என்னதான் செய்வது?

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்களும், அவர்களுக்கான அரசியல் தலைவர்களும் ஐஏஎஸ் தேர்வு என்பதை ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், அவர்களின் வாக்கு வங்கி என்னவென்று யோசிக்காமல் நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும். உயர் சாதியைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள். நேர்மை, மெரிட், நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.... அதற்கு மிக முக்கியம் இந்த பிரச்சனை பற்றிய புரிதல்......

Best regards,