Tuesday 28 February 2012

புடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து!!


நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவனமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக்கிறது... உள்பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு.

இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜி.டி.பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்றுநோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச்சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரத்தை அணுகினோம்.

தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது வழக்கம்.

அதனால் இடுப்பு பகுதியில் தழும்பு அல்லது சருமம் கருப்பாக மாறுமே தவிர, என் மருத்துவ அனுபவத்தில் சேலை புற்றுநோய் பாதிப்பை கேள்விப்பட்டது கிடையாது. தழும்பு மற்றும் சரும பிரச்னை உள்ளவர்கள், பாவாடை நாடாவை தளர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.

மெல்லிய நாடாவுக்கு பதில் பட்டை போல வைத்துக்கொண்டால், தழும்பு ஏற்படாது. ஒரே இடத்தில் கட்டாமல், பாவாடை முடிச்சை மாறி மாறி கட்டலாம் என்கிறார்.

பொதுவாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய். புடவை கட்டுவதால் இடுப்புப் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்பது புதிய தகவல். அந்த பிரச்னையோடு இதுவரை யாரும் வந்ததில்லை. சிலருக்கு சருமத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட பகுதியை பாவாடை நாடா கொண்டு இறுக்கும்போது, நோயின் தன்மை வெளிப்பட்டு இருக்கும் என்கிறார் சென்னை புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாகர்.

புடவை பெண்களுக்கு டாக்டர் டிப்ஸ்

பாவாடை நாடாக்களை இறுக்கிக் கட்டக்கூடாது.
பாவாடை நாடாவை மெல்லிய கயிறால் கட்டாமல் பட்டையான கயிறு கொண்டு கட்டலாம்.

பாவாடைக்குக் கயிறு பயன்படுத்தாமல், பட்டையாக பெல்ட், லூப் போல தைத்துக் கொள்ளலாம். நாடா பட்டையாக இருப்பதால் அழுத்தம் மற்றும் தழும்பு ஏற்படாது.
ஒவ்வொரு முறை புடவை கட்டும்போது பாவாடை முடிச்சை வலது, இடது என மாற்றி கட்டிக் கொள்ளலாம்.சருமத்தில் தழும்பு ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரை அணுகவேண்டும்.