Thursday 13 December 2012

வீரமங்கை வேலுநாச்சியார் (1730)

வடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற, ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். 
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.
வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார். 
1730லஆம் ஆண்டுஇராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

ஆங்கிலேயர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

படை திரட்டல்
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்தரவிட்டார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருதுபெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
வேலு நாச்சியார் கைப்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார்.

இறுதி நாட்கள்
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.

சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்

1. 1728 - 1749 -
முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
13. 1878 - 1883 - துரைசிங்கராஜா
14. 1883 - 1898 - து. உடையணராஜா
15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா
16. 1941 - 1963 - து. சண்முகராஜா
17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.