Wednesday 19 December 2012

திருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியாரும்

ராமநாதபுரத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர் திருப்புல்லாணி. இந்தத் தலத்துக்குச் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமாளை உள்ளம் உருக ஒருமுறை வழிபட்டால் வாழ்க்கையிலும் சர்வ மங்கலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளும், அவர்தம் தேவியாரும், அவர் குடியிருக்கும் கோயிலில் பெருமாளுக்கு ஸ்ரீகல்யாண ஜகந்நாதன் என்றும் தாயாருக்கு ஸ்ரீகல்யாணவல்லி என்றும் பெயர். இத்தலத்தின் விமானமும்கூட கல்யாணம் எனும் மங்கலத்தைத் தாங்கியிருக்கும் அற்புத ஆலயம் இது! இதனாலேயே சர்வ மங்கலங்களும் நமக்கு கிடைக்க இங்கே தடையேது? என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீராமன் இலங்கையை அடைய சமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும். அதன்பொருட்டு கடலரசனை வேண்டிக்கொள்ள ஸ்ரீராமன் தர்ப்ப சயனம் செய்தார். அவரின் திவ்ய திருமேனியை தர்ப்பை புற்களால் தாங்கி பெரும் புண்ணியம் கட்டிக்கொண்ட ஊர் இது, ஆகவே திருப்புல்லாணி என்று பெயர் வந்தது. இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இங்கிருக்கும் அரச மரம். மிகப் பழமையான இந்த அரச மரத்தை, போதி என்று பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதன் அருகில் இருக்கும் மேடையில் நாகப் பிரதிஷ்டை செய்து, மனதார வேண்டிக் கொண்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆதியில் படைப்புத் தொழிலை தாமே செய்து வந்த பரம்பொருள், பிறகு அதற்கென்று ஒரு கர்த்தாவாக பிரம்மனைப் படைத்தது பிரம்மனிடம் சிருஷ்டி தொழிலை ஒப்படைத்தார். சிருஷ்டியைத் துவங்க தெற்கு நோக்கிப் புறப்பட்டா பிரம்மா ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதி ஒன்று தோன்றி மறைவதைக் கண்டார். அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று விசாரித்த போது, அதுவே போதி மரம். அந்த மரத்தடியில் தான் ஜகந்நாதன் தங்குகிறான் என்று அசரீரியாய் ஒலித்தது. எனவே இந்த விருட்சத்துக்கு இந்தத் தலத்தில் மக்ததுவம் அதிகம். மரங்களில் நான் அரச மரம் என்று கீதையில் கண்ண பரமாத்மா அருளிய வாக்கு இங்கே மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்!