Thursday 4 April 2013

சி.பி.ஐ குறிவைக்கிறதா புதிய தலைமுறை தொலைக்காட்சியை?

அண்மையில் தண்ணிவண்டி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டால் சி.பி.ஐ விசாரணையைச் சந்திக்க வேண்டிவரும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுத்திருந்தார். உண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவரா? இக்காணொளியை பார்வையிட்டால் உங்களுக்கு உண்மை புரியும் - http://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk

இவ்வாறு தமிழீழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களுக்கு எதிராகவும் அவதூறாக கருத்துக்களைக் கூறியிருந்தவர் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனரான பாரிவேந்தர். ஆரம்பகாலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செயல்படவில்லை அதன்பின்னர் தான் ஈழத்தமிழரைப் பற்றிய செய்திகளில் அது கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தது. தனது வளர்ச்சிக்கும் தமிழின உணர்வாளர்களின் ஆதரவையும் பெறுவதற்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்திருந்தது.

ஆரம்பகாலத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியானது இறுதியுத்தம் முடிவடைந்த பின்னர் சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்ட சுமார் 11.000 புலிச் சந்தேக நபர்களைப் போர்க்குற்றவாளிகள் என்று சிங்கள அரசே அவ்வாறான செய்தியை வெளியிடாத போது புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்ச்சியாக போர்க்குற்றவாளிகள் என்று தமிழர்களைக் கூறி செய்தியாக வெளியிட்டு வந்திருந்தது. மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக மூவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி வலியுறுத்தி வந்தது. இதனை நான் பல தடவை கண்டித்திருக்கிறேன், அதனைப் போலவே தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களும் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். அதன்பின்னர்தான் தனது கொள்கையை ஒரளவு மாற்றிக்கொண்டது. ஆனால் புலிகளின் புகழ் பாடுவதை தடுத்தும், தனித் தமிழீழம் தான் தமிழருக்கு ஒரே தீர்வு என்று தங்களின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் கூறிவிடக்கூடாது என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது. இவ்வாறு தான் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர்.

அண்மையில் தனித் தமிழீழத்திற்காக ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகத் தண்ணிவண்டி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தனித் தமிழீழத்திற்கு எதிராகவும் கருத்துக்கூறிவருபவர்களான ஞாநி, சேகர் போன்றவர்களையும் அதிமுகவைச் சேர்ந்தவரையும் அழைத்து தீர்மானம் தொடர்பாக நிகழ்ச்சியை நடத்தியது, அதாவது அந்நிகழ்ச்சியில் அதிமுகவைத் தவிர அனைவருமே தனித் தமிழீழத்திற்கு எதிரானவர்களாகத் தான் இருந்திருதார்கள், புதிய தலைமுறை தொலைக்காட்சி திட்டம் தீட்டி தனித் தமிழீழத்திற்கு எதிராகப் பேசிவருபவர்களை வைத்து தனித் தமிழீழம் என்ற கோரிக்கை தவறானது, அதனை நிறைவேற்றியது தவறு, ஜெயலலிதா அவர்கள் அரசியலுக்காக இவ்வாறு தீர்மானம் போட்டிருக்கிறார் என்று குறை கூறினார்களே தவிர அத்தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு யாரும் பாராட்டவில்லை. தமிழக மக்கள் மத்தியில் தனித் தமிழீழம் என்ற கோரிக்கையானது நியாயமற்றது என்பதை தமிழீழத்திற்கு எதிரானவர்களை வைத்து விசமத்தனமான பிரச்சாரத்தில் அன்று ஈடுபட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சி. தேர்தலில் தோல்வியடைந்த தண்ணிவண்டி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அந்நிகழ்ச்சியில் ஏன் அழைக்கப்பட்டார்? ஏன் தனித் தமிழீழத்தை ஆதரிக்கும் தமிழீழ ஆதரவாளர்களை அந்நிகழ்ச்சியில் அழைக்கப்படவில்லை? உண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனரின் கொள்கை தனித் தமிழீழத்திற்கு எதிரான கொள்கையாகும். ஆனால் வடவரின் அடிவருடியாகவும், தமிழினத்தின் விரோதியாகவும் செயல்படும் தண்ணிவண்டி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இவற்றை புரிந்துகொள்ளாமலும், அன்று ஈழத்தில் தமிழின அழிப்பு நடைபெற்ற காலத்தில் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பல உண்மைகளை மறைத்து தமிழின அழிப்பிற்கு துணை நின்றது போல ஏன் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருக்கிறது?, ஏன் ஈழத்தமிழரைப் பற்றிய செய்திகளைப் போடுகிறது?, ஏன் ஈழத்தமிழரைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் போடுகிறது?, ஈழத்தில் நடக்கும் அக்கிரமங்களை புதிய தலைமுறை தொலைக்காட்சி மூடிமறைக்கக் கூடாதா? இதனால் காங்கிரஸ் அரசிற்கு அழுத்தம் கூடுகிறதே, மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் அழியப் போகிறதே என்ற ஆதங்கத்தினால் ஆத்திரமடைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் சி.பி.ஐ விசாரணையைச் சந்திக்க வேண்டிவரும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுத்திருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இன்று சி.பி.ஐ. வளையத்தில் பாரிவேந்தர்! என்று விகடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அதனை அப்படியே தருகிறேன் படியுங்கள்



சி.பி.ஐ. வளையத்தில் பாரிவேந்தர்!

லட்சக்கணக்கில் நன்கொடை வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு மீடியா வெளிச்சத்துக்கு வந்துள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான பாரிவேந்தர்!

சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜம்பாலா என்பவரின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. சொகுசு பங்களா, விலை உயர்ந்த கார்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்த ஜம்பாலாவின் வீட்டில் சோதனை நடத்திய சி.பி.ஐ. வசம் ஒரு துண்டுச் சீட்டு சிக்கியது. வரவு செலவு டைரியில் இருந்த அந்தத் துண்டுச் சீட்டில், தனது மகள் மானஷாவை மருத்துவப் படிப்பில் சேர்ப்பதற்கு நன்கொடை கொடுத்த வகையில் 40 லட்சம் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய மகள் மானஷா எம்.பி.பி.எஸ். படித்தது எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில். இதையடுத்து, பாரிவேந்தரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அவருடைய மகன் ரவி பச்சமுத்துவும் சி.பி.ஐ. விரித்த வலைக்குள் வந்தனர். விசாரணைக்கு வரும்படி இருவருக்கும் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. தந்தையும் மகனும் விசாரணைக்கு வராமல், கல்லூரியின் பதிவாளரை அனுப்பிவைத்தனர். அத்துடன், முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.

பாரிவேந்தரின் மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, அவருக்கும் அவரது மகனுக்கும் முன்ஜாமின் வழங்கினார். கூடவே, சி.பி.ஐ. விசாரணைக்குக் கண்டிப்பாக நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு பாரிவேந்தரும் அவரது மகன் ரவி பச்சமுத்துவும் காலை 9.20 மணிக்கு வந்தனர். அங்கு வந்து குவிந்திருந்த ஐ.ஜே.கே. தொண்டர்கள் இருவரையும் கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். அவர்கள் விசாரணை முடிந்து வெளியில் போகும் வரை, சாஸ்திரி பவன் ஐ.ஜே.கே. கட்சியின் அலுவலகத்தைப் போல் காட்சியளித்தது.

மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணை பற்றி சி.பி.ஐ. தரப்பு என்ன சொல்கிறது? ''கல்லூரியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? கட்டாய நன்கொடை வாங்கியது உண்மையா? போன்ற கேள்விகள்தான் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள், 'நாங்கள் யாரிடமும் கட்டாய நன்கொடை வாங்குவதில்லை. விருப்பப்பட்டு சிலர் கொடுக்கின்றனர். அதுவும்கூட பணமாகக் கொடுப்பது இல்லை. கல்லூரிக்குத் தேவையான வசதிகளாகத்தான் செய்து கொடுக்கின்றனர்’ என்றனர். 'ஜம்பாலா உங்களிடம் 40 லட்சம் கொடுத்ததாக கூறி இருக்கிறாரே’ என்ற கேள்விக்கு, 'இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பணியில் இருந்தவர்கள் இப்போது இல்லை. அவர்கள் கல்லூரியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வாங்கியிருக்கலாம்’ என்றனர். அடுத்தடுத்த விசாரணையில் முழு உண்மை தெரியவரும்'' என்கிறது சி.பி.ஐ. தரப்பு.

பாரிவேந்தர், ரவி பச்சமுத்து ஆகியோரிடம் இதுபற்றி விவரம் கேட்க முயன்றோம். அவர்கள் தரப்பில் அவர்களுடைய வழக்கறிஞர் அபுடூகுமார் பேசினார். ''இப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகள்தான் இதற்குக் காரணம். இத்தனை பெரிய குற்றச்சாட்டை சொல்லும் சி.பி.ஐ. அதற்கு ஆதாரமாக இதுவரை எதையும் சமர்ப்பிக்கவில்லை. ஜம்பாலா என்பவர் டைரியில் எழுதிவைத்து இருந்தார்... அவரிடம் துண்டுச் சீட்டு இருந்தது என்று கதைவிடும் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நாங்கள் முன்ஜாமின் கேட்டபோதுகூட, எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதில் இருந்தே இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது தெரிகிறது. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் பெயரைக் கெடுக்க சிலர் செய்யும் சதி வேலை இது. சட்டப்படி நாங்கள் இவற்றைச் சந்திப்போம்'' என்றார்.

இதற்குப் பின்னணியில் அரசியல் உள்ளதா? ''எங்களது ஊடகங்களின் மூலமாக வெளியிடும் செய்திகளை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி நடவடிக்கை எடுத்து மிரட்டுகிறார்கள். முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் எங்களை நேரடியாகவே மிரட்டினார்'' என்றார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர் ஒருவர்.

சி.பி.ஐ. தரப்பிலோ, ''அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. கணக்கு வழக்குகள் ஒழுங்காக இருந்தால், அவற்றை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டியதுதானே?'' என்று திருப்பிக் கேட்கின்றனர்.

தவறு பாரிவேந்தர் மீதா, காங்கிரஸ் மீதா?



இவ்வாறு சன் டீவியுடன் இணைந்து செயல்படும் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது, சன் டீவிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் இடையே மோதல் நிலை இருந்துவருகிறது, சன் டீவியின் சகோதர்களின் ஊழலை வெளியே கொண்டுவராமல் மூடிமறைத்தது விகடன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கருணாநிதி காங்கிரஸில் இருந்து விலகியவுடனே சி.பி.ஐ. அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படும் ஸ்டாலினை விசாரணை செய்தது, பாரிவேந்தர் பாரதிய ஜனதாவின் கட்சியுடன் இணைந்துள்ளார். காங்கிரஸின் ஊழல், ஈழத்தமிழர் விடயம் போன்றவற்றில் அவரது தொலைக்காட்சி காங்கிரஸிற்கு எதிராக இருப்பதாக கருதுகிறார்கள் காங்கிரஸார், இதனால் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சி.பி.ஐ விசாரணையைச் சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டல் விடுத்திருந்தார், அவர் கூறியது தற்போது நடைபெற ஆரம்பித்திருக்கிறது, இவர்களின் நடவடிக்கைக்கு அஞ்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஈழவிடயத்தை பற்றி அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது, மாணவர்களின் போராட்டம் பற்றிய செய்திகளையும் அது தொடர்பான விடயங்களையும் போடாமல் தவிர்த்து வருகிறது, மற்றும் நேற்றைய தினம் நடிகர் சங்கத்தினால் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றியும் பெரிதாகச் செய்திகளைப் போடவில்லை. ஊடகத்திற்கு மிரட்டல் விடப்பட்டால் அதனை ஊடகவியலாளர்கள் கண்டித்திருக்க வேண்டும் ஆனால் பலர் இதனைக் கண்டிக்கவில்லை. தற்போது சி.பி.ஐயின் விசாரணை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் அக்கிரமங்களை தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தமிழக ஊடகங்களை அடக்க முயற்சி செய்கிறது, இதற்கு எதிராகத் தமிழகத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.