Saturday 24 November 2018

`சாதாரண காய்ச்சலென்று விட்டுவிடாதீர்கள்!' - பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் அட்வைஸ்

`சாதாரண காய்ச்சலென்று விட்டுவிடாதீர்கள்!' - பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் அட்வைஸ்

மழைக்கால பாதிப்புகளான டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்கள் எளிதில் தாக்கும் பட்டியலில் குழந்தைகள் முன்னிலையில் இருக்கின்றனர்.
``குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்கும் என்பதால் காய்ச்சல் பாதித்தால் அவர்களைத் தனிக்கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.

``பன்றிக்காய்ச்சல் காற்றில் பரவும் தொற்று. அதனால் குழந்தைகளை அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் இருமும்போது தும்மும்போது அவர்களிடமிருந்து கிருமி பரவ வாய்ப்புள்ளது. பள்ளிக்குச் சென்று வந்ததும், வெளியே விளையாடிவிட்டு வந்தாலும் கை, கால்களைச் சுத்தமாக கழுவச் சொல்ல வேண்டும். பன்றிக்காய்ச்சலைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளன. ஆரம்பத்திலேயே மருத்துவர்களிடம் கொண்டு சென்றுவிட்டால் கூடுதல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் சாதாரண காய்ச்சல்தானே என்று பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது.

டெங்கு சாதாரண காய்ச்சல் போன்றுதான் இருக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு காய்ச்சல் குறைவது போன்று இருக்கும். ஆனால், 99, 100 டிகிரி எனக் குறைவான காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில் சில குழந்தைகளுக்கு உடலில் உள்ளுறுப்புகளில் ரத்தப்புள்ளிகள் ஏற்படும். ரத்தத்தில் தட்டணுக்கள் குறையும். அடுத்தகட்டமாக ரத்தக்குழாய்களிலுள்ள நீர் உடலுக்குள்ளேயே கசியத் தொடங்கிவிடும். அது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' நிலை. மருத்துவரின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்தால் தீவிர சிகிச்சையின் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும். டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள குழந்தைகள் கை, கால்கள் வெளியே தெரியாமல் ஆடை அணிவது நல்லது. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களால் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்க முடியாது. அதனால் வீடுகள், பள்ளிகளின் அருகில் கொசு உற்பத்தியாகாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பிரச்னை இருந்தால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம். அதன் மூலம் பிற குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும். பள்ளிக்கு வந்திருக்கும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட வேண்டும்" என்கிறார் டாக்டர் ரெக்ஸ்.

Best regards,