Monday 31 December 2018

2019 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

2019 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்  கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான்.

புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது.

1.பத்து நிமிடங்கள் முன்னதாக:
காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

2.பத்து நிமிடங்கள் மௌனமாக:

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.

3.முப்பது நிமிடங்கள்:
ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.

4.உணவிலும் ஒழுங்கு:
வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.

5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:Day Task.

6.அடைசல்கள் அகற்றுங்கள்:
அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது.

7.மனிதர்களை நெருங்குங்கள்:
இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:
வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

10.நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:
ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:
உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:
உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:
இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:
மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

நல்வாழ்த்துக்கள்...புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!
அன்புடனும் நட்புடனும்...

Best regards,