Thursday 27 December 2018

ரிங்கா, ரிங்கா ரோசஸ்' நாட்டுப்புற இழவுப் பாடல்...

"ரிங்கா, ரிங்கா ரோசஸ்' நாட்டுப்புற இழவுப் பாடல்...

எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது.

ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தற்செயலாக நான் படித்த, "மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்...

கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, "பிளேக்!' அந்த நோய் கண்டவர்களின் முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து  காணப்படும் தடிப்புகள்.

அதாவது, "ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, "பாக்கட் புல் ஆப் போசீஸ்' அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், "போஸி' என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், "பிளேக்' நோயை விரட்டும் என்ற
நம்பிக்கையோடு!

மூன்றாவது அறிகுறி, "அ டிஷ்யூ... அ டிஷ்யூ...' ஏதாவது புரிகிறதா? அட... தும்மல் ஒலிங்க! அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால்,” வி ஆல் பால் டவுன்!' இப்போது புரிந்திருக்குமே...

ஆம்! அவர் விண்ணகத்திற்கு, "டிக்கட்' வாங்கியாயிற்று என்பது பொருள்.

இனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா?..

வெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு? ....


Best regards,