Wednesday 11 March 2020

நமக்கு வராது..?????

நமக்கு வராது..????? 🙄🙄🙄🤔🤔🤔

--------------------------------

கிட்டத்தட்ட முதல் நூறு மரணங்கள் நிகழும்வரை சீனாவும் சுதாரிக்கவில்லை. சீன புத்தாண்டின் கொண்டாட்ட நேரம் அவர்களுக்கு இப்படித்தான் விடிந்திருக்கிறது. இன்று மூவாயிரம் பேரைக் காவு வாங்கிவிட்டு, உலகத்தின் அத்தனை மூலைகளுக்குள்ளும் நுழைய ஆரம்பித்திருக்கிறது கரோனா.

எங்கோ தூரத்தில் கேட்டிருந்த சேதிகள், இன்று நம் வீட்டு கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. 'சீனாவில்தானே' என்ற மனநிலை 'இந்தியாவில்' என்றதும் கொஞ்சமாய் பதறுகிறது. சற்று நேரத்தில் அதை மறந்து, 'பெங்களூரில்தானே' என்று ஆசுவாசம் கொள்கிறது. நாளை சென்னை என்றாலும் கும்பகோனத்தில் உள்ளவனுக்கு பயம் வராது. அந்தளவிற்கு தற்காப்பு முனைப்புகள் சுரணையற்று போய்விட்டன. இது மணிக்கு மணி துயரம் அதிகமாகிக்கொண்டிருக்கும் பேரிடர் கணம்.

 நம்மால் கற்பனை செய்யமுடிந்ததைத் தாண்டிய மிக மோசமான தொற்று இது. மருந்தில்லாத தொற்றுகள், ரத்தத்தின் மூலம் பரவியதற்கு இருந்த பயம் கூட காற்றில் பரவிக்கொண்டிருக்கும்போது இருக்கவில்லை. முன்னொரு காலத்தில், சார்ஸ் என்றொரு தொற்று வந்தது நினைவிருக்கலாம். அதுவும் கரோனா வைரஸ்தான். இது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். சார்ஸ்-2. இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை இந்தியாவில் முப்பது பேருக்கு அந்த தொற்று வந்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் மரணக் கணக்குகள் ஆரம்பமாகிவிட்டன.

சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, நமது நிலை ரொம்பவே பரிதாபத்திற்குறியது. இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லி மக்களை நெறிப்படுத்துவதும் அத்தனை சுலபமில்லை.

அரசாங்கம் எதுவுமே செய்வதில்லை என்றவொரு பிரசங்கம் இங்கு பரவலாக உண்டு.

இன்னொரு விஷயம், டெங்குவை மர்மக் காய்ச்சல் என்று மழுப்பியதாக சொல்லப்படுவது. அரசின் ஒரு அறிவுரைக்கு இங்கு எத்தனை பேர் செவி சாய்க்கிறார்கள். வீட்டில் நீர் தேங்கும் தொட்டிகள் வைக்காதீர்கள் என்று சொன்னபோது அதை சட்டையே செய்யாமல் ஹிண்டு பேப்பர் படித்துவிட்டு, பின்னர் அதற்கே அபராதம் போட்டப்போது குய்யோ முய்யோவென்று கத்திய மெத்த படித்தவர்கள் எத்தனை எத்தனை பேர். வரும் எந்த ஓர் அபாயமும் எனக்கானதல்ல என்று பொறுப்பற்று திரியும் மெத்தனம் இங்கே மலிந்துப்போயிருக்கிறது. பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டுவிட முடியாது.

'மர்மக் காய்ச்சல்' என்பது, கறை பட்டுவிடக்கூடாது என்ற அரசியல் சாதுர்யத்தையும் தாண்டிய அச்சுறுத்தலும் கூட. 'டெங்கு' என்ற வார்த்தைக்கு மக்களிடம் பயமே இல்லாமல் போய்விட்டது. 'மர்ம' என்றால் கொஞ்சம் பயம் சேரும். அவ்வளவுதான். இப்போது கரோனாவை வைத்துக்கொண்டு மீம்களும் அவல நகைச்சுவைகளையும் பரப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், வரப்போகும் பேரழிவு குறித்து எந்தவொரு விஷய ஞானமும் இங்கே இல்லை என்றுதான் படுகிறது. அதுதான், கரிவேப்பிலை ஜூஸில் இரண்டு சொட்டு கருவாட்டு ரத்தத்தை விட்டு குடித்தால் கரோனா அண்டாது என்ற புளுகல் பரப்புரைகளைச் செய்யச்சொல்கிறது.

தமிழ்நாடு மாதிரியான சுகாதாரத் துறையில் முன்னேறியுள்ள மாநிலத்திலேயே இந்த நிலை என்றால், வடக்கைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.

சீனாவில் செயல்படுத்த முடிந்த மாஸ் ஷட் டவுன் முறையெல்லாம் இங்கு சாத்தியமாவென தெரியவில்லை. கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள், சிறு சிறு கடைகள், பேருந்து, ரயில், விமானம், வங்கிகள் என அத்தனையையும் வாரக் கணக்கில் மூடி வைப்பதன் சாத்தியத்தை யோசித்துப் பார்க்கமுடிகிறதா? உணவு தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, நிர்வாக குளறுபடிகள், ஒரு மிகப்பெரிய நோய்த்தொற்றை உடனடியாக சமாளிக்க மருத்துவமனை/மருத்துவர்கள் போதாமை என எத்தனை எத்தனை துயரங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.

பேராபத்து நெருங்கும் முன்னரே நாமே வலிந்து இறங்கி செய்யவேண்டியது சில இருக்கின்றன.

1) விதண்டாவாதம் செய்யாமல் சுகாதாரத் துறை அறிவிப்புகளை ஏற்பது. அது குறித்து எந்தவொரு அவநம்பிக்கை உண்டாக்கும் எந்தவொரு செய்தியையும் கூடுமானவரை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பது

2) கூடுமானவரை கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களை தவிர்ப்பது. திரையரங்குகள், திருமண நிகழ்வுகள், அவசியமற்ற பேருந்து/ரயில் பயணங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைய்யுங்கள்.

3) மருத்துவமனைகளுக்கு வேறேதோ பிணிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்கள்/ நண்பர்களை நலம் விசாரிக்க அநாவசிய விஜயம் செய்யாதீர்கள். அரசு மருத்துவமனையிலிருக்கும் முக்கால்வாசி கூட்டம் உறவினர்களும் நண்பர்களும்தான்.

4) மின்தூக்கிகள் பிரயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

5) மாஸ்க் அணிவதால் இருக்கும் நன்மையைவிட கையை சுத்தகரிக்க பயன்படும் hand sanitizerகளால்தான் நன்மை அதிகம். எப்போதும் கையிருப்பு வைத்துக்கொள்ளவும். அடிக்கடி கை கழுவவேண்டியது அவசியம்.

6) மருந்தோ தடுப்பூசியோ இல்லாததால்தான் நாடுவிட்டு நாடு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் மருந்து எனில் அதை அரசே அறிவிக்கும். வாட்ஸப்பில் தினமும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்காதீர்கள்.

7) வீட்டில் நாய் வளர்ப்பதால், மாடு வளர்ப்பதற்கு எதிரான கருத்துகளை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்.

8) கரோனா வராமல் இருக்க சிறப்பு வழிப்பாட்டு கூட்டங்கள் நடந்தால் முன்வரிசையில் போய் நிற்காதீர்கள். கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் அனைத்தையும் கொஞ்சம் காலத்திற்கு ஒதுக்கி வைய்யுங்கள். கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கியமான இடங்களில் அவைதான் முதலிடம்.

இந்த பதிவையும் பகிர்ந்துவிட்டு, இதெல்லாம் யாருக்கோவெனதான் இருக்கப்போகிறோம். இதில் தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கடமை இருக்கிறது. அரசு பார்த்துக்கொள்ளும், அரசு முன்னெச்செரிக்கையாக இருக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்போமாயின், பிணக்குவியல்களை நம் செய்தி ஊடகங்கள் சில வாரங்களில் காட்டத் துவங்கும்.

' நமக்கு வராது' என்ற மனநிலைதான் நம் சமூகத்தின் முதல் கேடு. கூடுமானவரை தன்னொழுக்கத்துடன் போராடிப் பார்க்கவேண்டிய அவசரநிலை இது. தவறவிட்டோம் எனில், மாஸ் ஷட் டவுன் என்ற சுகாதார சர்வாதிகாரம் பிரகடனத்திற்கு வந்தே ஆகவேண்டிய நிலை வரும். நம் மக்கட்தொகையும், அதற்கு பொருந்தாத நில நெரிசலும், இந்த விஷக்கிறுமிக்கு மிகத் தோதான விளைச்சல் நிலம். கொத்து கொத்தாக அறுவடை விழும்.       " விழித்துக்கொள்வோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்Best regards,