Thursday 19 March 2020

நம்மை_அச்சுறுத்துவது

நம்மை_அச்சுறுத்துவது

#கொரோனாவா  #கொடிய_அரசா ?

அன்பார்ந்த மக்களே வணக்கம்

உலகமெல்லாம் பரவி கொண்டு மக்களை தினமும் நூற்றுக்கணக்கில் காவுவாங்கிக் கொண்டிருக்கிறது கொள்ளை நோய் கொரோனா.

உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள் எல்லாம் அவசரநிலையை அறிவித்துவிட்டன. இந்திய அரசோ எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்கிறது. கொரோனா வந்து கொன்று விடும் என்ற பயத்தை விட ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளுக்காக நடுரோட்டில் நிற்க வைத்தவர்கள், ஜிஎஸ்டியாலும் பொருளாதார பஞ்சத்தை உருவாக்கி வேலையின்மையை உருவாக்கி சாகடித்தவர்கள்தான்  நம்மை காப்பாற்ற போகிறார்கள் என்பதை நினைத்தால் நெஞ்சு வெடித்து விடும்போல் இருக்கிறது. கொரோனா வந்தவர்கள் கூட இந்த அரசை நம்பத்தயாரக இல்லை.

சீனா காரன் நாய்கறி தின்பான் பூரான் - பூச்சி தின்பான் அதனால் கொரோனாவந்து செத்துப் போனான் என்று நக்கல் அடித்தார்கள். கொரோனாவுக்கு மாட்டு முத்திரம் குடி ஆலோசனை சொன்னவர்கள் அப்போலோவில் அட்மிட் ஆகிறார்கள்.

சீன அரசு ஏழு நாட்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை கட்டியிருக்கிறது. இந்திய அரசு ஒரேநாளில் ஏன் இந்தியாவை போண்டியாக்கி இருக்கிறது .யுகான் மாகாணத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான உணவு உடை, நீர், மருந்துகள் உட்பட அனைத்தையும் வீட்டுக்கே சென்று கொடுத்தது சீன அரசு. ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை இழுத்து மூடிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

முகக் கவசம், உடல் கவசம், மருத்துவம் என அனைத்தையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து மக்களை கொரோனாலிருந்து மீட்பதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது சீன அரசு. உலக சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு அங்கே சென்று எந்த நாட்டிலும் இப்படி ஒரு மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி இருக்க முடியாது என்று பெருமைபட கூறுகிறார்கள்.

இந்தியாவின் நிலை என்ன? ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் மேல் மருத்துவத்துறை தனியார் மயமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன. நாய்க்கடிக்கு மருந்து இல்லை, பாம்புக் கடிக்கு மருந்து இல்லை, மாவட்ட மருத்துவமனைக்கு போ என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது அரசு.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கவச உடை கூட கிடையாது. எப்படி மருத்துவர்கள் வைத்தியம் பார்ப்பார்கள்?

 கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருக்கு முக்கியமான இரண்டு மருத்துவ கருவிகள் தேவைகளாக உள்ளன. ஒன்று ரோபோட்டிக் மருத்துவம் இன்னொன்று எக்மோ கருவி. இந்த இரண்டும் எத்தனை அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன?

சின்னஞ்சிறு நாடான கியூபா தனது  மருத்துவர்களை உலகம் முழுக்க அனுப்பி இந்தக் கொள்ளை நோய்க்கு எதிராக தன்னால் முடிந்த அளவுக்கு ஆன உதவிகளை செய்து வருகிறது ஆனால் மோடி அரசு மருத்துவர்களே உருவாகாமல் இருப்பதற்காக நீட்  தேர்வை கொண்டு வந்து வைக்கிறது.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் அது யாருக்கும் பரவாது .இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டை  உருவாக்கியுள்ளது  எடப்பாடி அரசு.

சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மட்டுமே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்றால் நகரின் மையப்பகுதியில் , ஒரு பொது மருத்துவமனையில் இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கொள்ளை நோய் பரவும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இவர்கள் செலவு செய்ததாக கூறப்பட்ட தொகையில் பாதியை கூட மருத்துவத்திற்கு செலவு செய்திருந்தால் ஊர் ஊராய் மோடி சுற்றினாரே அதற்கு செலவான கோடிகளில் சிறு பகுதியை செலவு செய்திருந்தால் எத்தனை எக்மோ கருவியையும் ரோபோட்டிக்களை உருவாக்கி இருக்க முடியும்?

இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் இழுத்து மூடி  மருத்துவர்களைக் பழிவாங்கும் இந்த அரசு இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி  காப்பாற்றும்?

எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மலக்குழியில் மனிதனை இறக்கி சாகடிக்கும் இந்த அரசு எப்படி நம்மை காப்பாற்றும் ?

நம்மை  எப்படி காப்பாற்றிக்கொள்வது? குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு முறையும் கொள்ளை நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு போதும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசுமேற்கொள்வது இல்லை.ஏர் இந்தியாவை எப்படி விற்கலாம் எல்ஐசியை எப்படி கபளீகரம் செய்யலாம்?  என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ  கொண்டு வந்து மக்களை அகதியாக்கும் அரசு , அரசுத்துறைகள் எல்லாவற்றையும் எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் அரசு மக்களுக்காக செயல்படுமா?

இப்போது 30 நொடிகள் சோப்பு போட்டு நன்றாக கையை கழுவினால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என்கிறார்கள். பல தொற்று நோய்களை உருவாக்கும் மருத்துவமனை கழிவறைகளை எதைப்போட்டுக்கழுவுவது?  ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, பொருளாதார இழப்பு, வேலையின்மை, சுகாதாரக்கேடு, சுற்றுப்புற சூழல் நாசம் ஆகியவற்றை உருவாக்கி கோடிக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமான இந்த கார்ப்பரேட் காவி அரசுக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டாமல் நாம் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?

போராடினால் தான் சுடுகாடு கிடைக்கும் என்ற சூழலில் நாம் போராடாமல் கொரோனாவிலிருந்து  மட்டும் எப்படி தப்பிக்க முடியும் ?

---

தமிழக அரசே !

புறநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மருத்துவமனைகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்கு !

தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்கிடு!

மருத்துவ கால அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திடு!

மக்கள் அதிகாரம்
சென்னை
9176801656Best regards,