Monday 2 March 2020

காய்கறி கவிதை

காய்கறி கவிதை

தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்
எக்காலும் நோயில்லை காண் .

எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர்
எலும்புக்கு வலு சேர்க்குமே .

வெங்காய மில்லாச்  சாம்பார் எஞ்ஞான்றும் 
தங்காதே நாவில் ருசி .

பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே
புடலங்காய் போற்றிச் சுவை .

தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய்
முள்ளங்கி மூன்றினை  த்தான்.

வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும்
தொண்டையில் இறங்காது காண் .

வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும்
வாழாதார் என்பது வழக்கு . 

கத்திரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம்
இத்தரையில் பித்தருக்குச் சமமெனக்கொள் .

பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில்
புகழோடு வாழ்வார் அவர் .

காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும்
நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.

முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் வேறெல்லாம்
வெறுங்கையில் முழம் போடுவர் .

காரிருளில் கண்தெரிய  வேண்டுமெனில் பாரிலுள்ள
கரிசலாங் கண்ணியைச் சேர் .

இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில்
கரும்பைப் போய் விரும்பிச்சுவை .

உரிக்க உரிக்கத்  தோல்தான் வெங்காயமென்றாலும்
செரிக்குமோ உரிக்காவிடில்.

பறித்தவுடன்   உண்ணுவீர் பரங்கியை எப்போதும்
பலனது   வேண்டுமெனில்

பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார்
சோகத்தில்  சேர்ந்து விழும்.

வெல்லத்தில்  இரும்புண்டு  ஆகையினால் சாப்பாட்டில்
ஒரு துண்டு சேர்த்துச்சமை . 

வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய்
தாழ்வேனெவே எண்ணு பவர்.

கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள்
தேரை வாழ்ந்த கதை .

பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும்
பீட்ரூட்டை உணவில் சமை.

கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் 
சத்தே என சரியாய் உணர் .
கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர்
சொறி பிடித்தோடுவார் காண் .

பொன்னிற மேனி வேண்டுமெனில் நீயந்த
பொன்னாங் கண்ணியைச் சேர் .

கண் இருந்தும் குருடரே காசினியில்
காய் கறியை உண்ணாதவர் .
💐💐💐💐💐💐💐💐
Best regards,