Friday 15 March 2019

காலைச் சுற்றிய பாம்பும், கடனும் ஒன்றே!-

காலைச் சுற்றிய பாம்பும், கடனும் ஒன்றே!-  👣

#MotivationStory 🐜

எ ல்லாம் முடிந்துவிட்டது. நான் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பல். இனி செய்ய எதுவுமே இல்லை குருஜி" என்றவனை குரு சிறு புன்னகையோடு பார்த்தார். 🛳

``வாழ்க்கையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது நண்பா, முடிவை ஆரம்பம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தை முடிவு என நினைத்துக்கொள்கிறார்கள்" 🤔

அவனுக்கு குருஜியின் பேச்சு கிண்டல் செய்வதைப் போல் இருந்தது.😢

``சொல் அளவுக்கு வாழ்க்கை எளிதானதல்ல குருஜி. நாம் அறியாத கணத்தில் வாழ்க்கை நம்மைச் சுழற்றிப் போட்டுவிடுகிறது. இன்று நான் ஒரு மீளமுடியாத கடன்காரன். நீண்ட நேரமாகப் புகைக்காததால் என் விரல்கள் நடுங்குகின்றன.
இங்கு உள்நுழைந்து கடன்காரன் கழுத்தைப் பிடிக்கமாட்டான் என்கிற நம்பிக்கையில் அமர்ந்திருக்கிறேன். அல்லது வெளியில் போனதும் நான் பிடிபட்டு விடலாம் என்று தோன்றுகிறது. அதற்குப் பயந்துதான் புகை பிடிக்கக்கூடப் போகாமல் இருக்கிறேன்"

``சரி... சரி. பதற்றம் வேண்டாம் நண்பா. வா நம் தோட்டத்துக்குப் போய் நடக்கலாம். நீ அங்குப் புகைபிடிப்பது என்றாலும் பிடிக்கலாம்."
குரு எழுந்து தோட்டத்தின் பக்கம் வந்தார். அவனும் கூடவே வந்தான்.🐇 🐿

``ம், புகைபிடிப்பதென்றால் நீ இங்குப் புகைக்கலாம். புகைத்துக்கொண்டே உன் கதையைச் சொல். எப்படி இவ்வளவு பெரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டாய்?"🕸

அவன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்தான். ஆனால் குரு கேட்ட கேள்வி அவனை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. உண்மையில் அவனுள்ளும் இதே கேள்வி இருக்கிறது.😗

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தொழில் ஓகோவென்று போகவில்லை என்றாலும் ஏதோ கௌரவமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அவனோடு தொழில் ஆரம்பித்த அநேகர் காலாவதியாகி வேறுவேறு வேலைகளுக்குப் போய்விட்டனர். இவன் மட்டுமே கொஞ்சமாக இருந்தாலும் லாபத்தோடு நிறுவனத்தை நடத்திவந்தான்.💐

நீண்டகாலம் கடன் இல்லாமல்தான் வாழ்ந்தான். இத்தனைக்கும் நாலைந்து வங்கிக் கணக்குகள். கடன் அட்டைகள். வரும் வருமானத்துக்குள் செலவுகள் எல்லாம் அடங்கின. எதிர்பாராமல் உறவினர் வகையில் ஒரு சிக்கல் முளைத்தது. பொதுவாக உறவுக்காரர்களுக்குச் சிக்கல் என்றால் கண்டும் காணாமல் இருந்துவிடவேண்டும் என்று நண்பர்கள் சொல்லும் வாழ்வியல் பொன்மொழியை அவன் அறிந்திருக்கவில்லை. உண்மையில் அவனிடம் அப்போது பணம் இல்லை. நண்பர்கள் யாரிடமும் கடன் கேட்டும் பழக்கம் இல்லை.🌸

அவன் வங்கிக் கணக்கை இணையத்தில் பயன்படுத்தத் திறக்கும்போதெல்லாம் வலதுபுறத்தில் `நியூ' என்று ஒரு சிவப்பு நிறச் சொல் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். அதை க்ளிக் செய்து உள்ளே போனான். உங்களுக்கான கடன் ரூபாய் 1,00,000 இப்போதே தயாராக இருக்கிறது என்று சொன்னது அந்த அறிவிப்பு. இதெல்லாம் சும்மா. எல்லாக் கேள்வியும் கேட்டுவிட்டு இல்லை என்று சொல்வார்கள் என்று நினைத்தான். 🏵

கடன் வட்டியைப் பார்த்தான், மிகக் குறைவுதான். எத்தனை மாதங்களில் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று கேட்டது. குறைவான மாதங்களையே தெரிவு செய்துகொண்டான். எந்த வங்கி எண்ணில் பணம் வரவு வைக்கவேண்டும் என்று கேட்டது. தெரிவு செய்தான். அதைச் சொல்லிவிட்டு அவன் தன் சேமிப்புக் கணக்குக்குத் திரும்புவதற்குள் கணக்கில் ஒரு லட்சம் ஏறியிருந்தது.
ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது. கடன்பெறுவது இத்தனை எளிதா, பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினான். திரும்பக்கேட்கும் எண்ணம் இல்லை. முதல் மூன்று மாதங்கள் கடனுக்கான தவணை மிக எளிதாகப் போனது. நாலாவது மாதம் தொழில் கொஞ்சம் சண்டித்தனம் செய்தது. ஐந்தாவது மாதம் படுத்தேவிட்டது. 🌺

``வணக்கம் சார், நாங்க ஒய் ... பேங்க்ல இருந்து பேசுறோம். இந்த மாதம் உங்க இ.எம்.ஐ இன்னும் வரலை." ,🌹

அவனுக்கு இது மிகப் புதிது. பணம் வர இன்னும் நாலு நாள்கள் ஆகலாம். 🌻

``இன்னும் நாலு நாள்ல கட்டிறேன் மா."

``சார் இன்னைக்கு நீங்க கட்டலைன்னா `ஃபினான்ஸியல் சார்ஜஸ்' கண்டிப்பா வந்திரும் சார். நான் வேண்ணா ஒரு வழி சொல்றேன் சார். உங்க லோனை டாப் அப் பண்ணிக்குங்க. இன்னும் 50,000 ரூபாய் கிடைக்கும் சார். அதை வைத்து இந்த இ.எம்.ஐ கட்டிடலாம் சார். வட்டி கணக்கு பண்ணினீங்கன்னா ஃபினான்ஸியல் சார்ஜை விடக் கம்மியாத்தான் இருக்கும் சார். நீங்க ஓகேன்னா நான் உடனே பிராசஸ் பண்றேன்"  🌷


தவிர்க்க இயலாதபடிக்குச் சொல்லப்படும் உடனடித் தர்க்கங்கள்.🌱

வேண்டாம் என்று சொல்லத் தயங்கி... உடனடி பிராசஸிங் முடிந்து கணக்கில் பணம். அடுத்த சில நிமிடங்களில் அந்த மாத இ.எம்.ஐ கழிக்கப்பட்டது. கடந்த முறையை விட இந்த முறை அரை சதவிகிதம் வட்டி அதிகம். கவனிக்கவேயில்லை.
தொழில் புவி ஈர்ப்பு விசைச் சார்ந்தது போலும். கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தால் அதைப் பிடித்து நிறுத்தவே இயலாது. இத்தனை ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சி. ஒரு மாதம் என்பது மிகவும் குறைந்த நாள்களைக் கொண்டது என்பதை இ.எம்.ஐ கட்டுபவர்களிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். அடுத்தடுத்த இ.எம்.ஐ கள். வழக்கம்போல உடனடி பிராசஸிங். எந்த தைரியத்தில் கடன் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை.🌲

வீட்டில் அவசரத் தேவை ஒன்று வந்தது. இந்த முறை அவனே தேடிப் போய்க் கடன் கேட்டபோது, ``சாரி சார். உங்க லிமிட் ஓவர்" என்றார்கள்.🌳

எது அவன் லிமிட்? அவனுக்கே புரியவில்லை. வெளியே நண்பர்களிடம் கை நீட்டினான். இரண்டு மூன்று மாதங்களில் கடன் தொகை கொஞ்சம் அடைந்ததும் மீண்டும் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது. அப்போதுதான் போய்ப் பார்த்தான். மூன்று மாதங்கள் கட்டிய இ.எம்.ஐ பணத்தை மீண்டும் கடனாகத் தரக் காத்திருந்தார்கள். இந்த முறை வட்டி இரட்டிப்பாயிருந்தது. 🌴


அதை வாங்க மனம் வரவில்லை. கடன்காரர்கள் துரத்த ஆரம்பித்தார்கள். வங்கிக்காரர்கள் தேட ஆரம்பித்தார்கள். ஒருமுறை போனை எடுத்தாலும் என்ன நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும். பேசாமல் அப்படியே எங்காவது ஓடிப் போய்விடலாமா என்று தோன்றியது.
சிகரெட் கையிலேயே இருந்தது. தோட்டத்தில் மலர்களின் மணம் அதீதமாய் இருந்தது. பற்ற வைக்க மனம் வரவில்லை.🌷🌷🌻🌼🌺

"ஆமாம் இந்த சிகரெட்டை எவ்வளவு நாளாகப் பிடிக்கிறாய்?"🌾

"18 வயதுமுதல், விட முடியவில்லை. மண்டையைப் பிளக்கும் டென்ஷனில் பயன்பாடு மும்மடங்காகிவிட்டது"🌿

"சரி , இப்போது என்ன உத்தேசம்?"☘

"என் நெருங்கிய நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான். அவனிடம் ஒரு பெரிய தொகை கேட்டிருக்கிறேன். வந்தால் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு கொஞ்சம் ஆசுவாசமாவேன்" 🍀🍁

" சிகரெட்டை..." 🍂🍂

"இதையும் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்". 🍃🍃

குரு அவன் தோள்களைப் பிடித்து நிறுத்தினார். திடீரென்று 🍊

"நண்பா, உன் கால்களில் பாம்பு..." என்றார்.🍋

அவன் துள்ளிக்குதித்தான். நின்ற இடத்திலிருந்து சில அடிகள் ஓடினான். பின்பு கால்களைத் தடவி விட்டுக்கொண்டான். குரு நின்ற இடத்திலேயே சிரித்துக்கொண்டு நின்றார். அப்போதுதான் அவர் தன்னைக் கிண்டல் செய்திருக்கிறார் என்று புரிந்தது. 🍍

"என்ன குருஜி. விளையாடுகிறீர்கள். நான் பயந்தே போய்விட்டேன்." 🍎


``நம்புகிறேன். நீ பயந்துதான் போய்விட்டாய். ஆனால் அப்போது உன் அனிச்சை செயல் மிகச் சரியாகச் செயல்பட்டது. புரியவில்லையா, உன் கால்களில் பாம்பு என்றதும் எப்படிப் பதறினாய்...ஒரு கணத்தில் அதிலிருந்து விடுபட முனைந்தாய். அதுதான் சரி. நீ எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாலும் காலைச் சுற்றிய பாம்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றி விடமுடியாது. ஒரே கணத்தில்தான் உதறவேண்டும். அதே போல்தான் உன் கடன் பிரச்னையும் புகைபிடிக்கும் பழக்கமும். ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைப்பது நடக்கவே நடக்காது. கொஞ்சம் கொஞ்சமாகப் புகைபிடிப்பதையும் நிறுத்தவும் முடியாது. என்ன ஆனாலும் சரி என்று ஒரே உதறல். அது ஒன்றுதான் எல்லாவற்றையும் சரிசெய்ய வழி. இல்லை என்றால் மீண்டும் மீண்டும் உன்னை இழப்பாய். 🍐🌰🌽

புவி ஈர்ப்பு விசைக்கு எதிர்விசை இல்லையென்று யார் சொன்னது? பின்பு எப்படி வானில் விமானங்கள் பறக்கின்றன? உன்னுள் இருக்கும் புதிய விசைகளை இயக்கு. பயப்படாமல் பதில் சொல். உன் கை நடுக்கத்தை சில நாள்கள் கண்டுகொள்ளாமல் விடு. எல்லாம் சரியாகிவிடும்"🍏🍓

கையிலிருந்து சிகரெட் பாக்கெட்டைத் தூக்கிப் போட்டான். குருவோடு கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தான். வங்கியிலிருந்து போன். கட் செய்யாமல் எடுத்துப் பேசினான்.🤗 🤗

Best regards,