Saturday 2 March 2013

காதலித்துப்பார்

காதலித்துப்பார் - இதில் ஒன்றேனும் நடக்கும்
அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்

நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது

கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்

மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்

மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்

தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்

அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்

என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்

அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்

ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)

நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்

கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்

வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்

பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்

காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்

கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..

வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்

உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்

குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்

மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்

ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்

ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்

அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்

தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்

சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்

அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...

யாவற்றிற்கும் மேலாக..,

அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..

டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.

இத்தனையும் நடக்கும்...

**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!