Friday 8 March 2013

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க…

 இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான்.
இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா.
ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர்.
இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும்.
அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.
* பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.
* உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.
* எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.
* சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர்.
ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.