Thursday 10 November 2011

`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை!



இந்தியர்களாகிய நாம், கருகரு முடியைத்தான் விரும்புவோம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் இயற்கை நமது கேசத்துக்கு வெள்ளையடித்தாலும், நாம் சாயம் பூசி `கறுப்புக் கிரீடம்’ சூடவே ஆசைப்படுகிறோம். கரிய முடி என்பது இளமையின் அடையாளம் என்பது நமது எண்ணம்.
சரி, விஷயத்துக்கு வருவோம். புதிதாக, தலைமுடி நரைப்பதைத் தடுக்கும் ஒரு மாத்திரையைப் பழச் சாறில் இருந்து தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.
சர்வதேச அழகுசாதன நிறுவனம் ஒன்று, பத்தாண்டு கால ஆய்வுக்குப் பின் இந்த மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. நான்காண்டுகளுக்குள் இது சந்தைக்கு வந்துவிடுமாம்.
இன்று உலகெங்கும் ஆண்களும், பெண்களும் தலைச்சாய பாட்டில்களை வாங்கிக் குவிக்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. இந்நிலையில், தங்களின் கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமையும் என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வில் ஈடுபட்ட ரோம உயிரியல் துறைத் தலைவர் புரூனோ பெர்னார்டு கூறுகையில், “ஆண்கள், பெண்கள் மத்தியில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்வதைப் போல இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை ஒன்றும் அதிக விலையுள்ளதாக இருக்காது” என்கிறார்.
இந்த மாத்திரை, வெளியே கூறப்படாத ஒரு பழத்தின் கூட்டுப்பொருளைப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட கூட்டுப்பொருளானது, நமது உடம்பில் நிறமி உற்பத்தியைப் பாதுகாக்கும் என்சைமான `புரோட்டீன் 2′வைப் போலவே செயல்படுகிறது.
`ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்ற நிலைதான் நமது தலைமுடியை நரைக்கச் செய்கிறது. அதாவது, முடிச் செல்கள் தீமை பயக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்களால் பாதிக்கப்படுவது.
நரைத்த முடியை மேற்கண்ட மாத்திரை திரும்பக் கருக்கச் செய்யாது, ஆனால் நரைப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலன் தரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நன்றி-தினத்தந்தி