Sunday 6 November 2011

அணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் கொடுத்தார் சர்டிபிகேட்


 
கூடன்குளம் அணுமின்நிலையம் முழு பாதுகாப்பானது என சுற்றி்பார்த்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கூறினார்.பீதியை ஏற்படுத்தி பெரும் போராட்டக்களமாக மாறியிருக்கும் கூடன்குளத்தி கலாம் முகாமிட்டுள்ளார். இவர் அணுமின் நிலையம் முழுவதும் சுற்றிப்பார்ப்பதுடன், போராட்டக்குழுவினர் அச்சம் தீர்க்கும் வகையில் மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார். ஆனால் போராட்டக்குழுவினருடனோ , அந்தப்பகுதி மக்களுடனோ சந்தித்து பேசும் திட்டம் இது வரை வகுக்கப்படவில்லை.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு பிரச்னையை முன்வைத்து பல நாட்களாக போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் மற்றும் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பு போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்களின் அச்சத்தைப் போக்க விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோரை கொண்ட 15 பேர் கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், போராட்டக் குழுவை சந்தித்து, மக்களின் அச்சத்தைப் போக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் கலாம் அணுமின் நிலையத்திற்கு சென்றார். இவருடன் இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின் , திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி, நிலைய இயக்குனர் சுந்தர், தலைமைப் பொறியாளர் ஜின்னா மற்றும் விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினார். அணு நிலையம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். மின்சாரம் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் நிருபர்களை சந்தித்து பேசுகிறார்.
அணு எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டாலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் இல்லை. அப்துல் கலாமை சந்தித்து பேசினாலும் அவரது கருத்தை ஏற்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.
கலாம் வருகையையொட்டி மத்திய, மாநில பாதுகாப்புப் படை போலீசார், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முற்றிலும் பாதுகாப்பானது அணுமின் நிலையம்: கூடன்குளம் அணுமின்நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று கூறுகையில்; கூடன்குளம் அணுமின்நிலையம் தொடர்பான அப்பகுதி மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எவ்வித பிரச்னையும் எற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித சர்ச்சையும் எழாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாத சுனாமி தாக்குதல் வந்தாலும் இந்நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருக்கின்றன என்றார்.