Monday 26 September 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள்- ஆ.ராசா


முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு சாட்சியாக அழைக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் தெரிவி்த்தார்.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பங்குண்டு என தெரிவி்த்தார்.

இந்த விவகாரத்தில் நடந்தது அனைத்தும் அவருக்கு தெரியும். இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும், விவரங்களும் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என சுஷில்குமார் குறிப்பிட்டார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் அமைச்சரவை முடிவுசெய்தது. எனவே ஒட்டுமொத்த அமைச்சரவையும் விசாரணையை சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். 2003 அமைச்சரவையில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வந்த அனைத்து அமைச்சரவையும் அதைப் பின்பற்றியது. அப்படியிருக்க ராசா மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். சிதம்பரத்தை ஒரு சாட்சியாக நீதிமன்றத்துக்கு அழையுங்கள். பிரதமரின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட்டதா அல்லது வழங்கப்படவில்லையா என்பதை அவரே கூறட்டும் என சுஷில்குமார் குறிப்பிட்டார்.