Saturday 29 October 2011

விணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு

நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே…அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் உங்கள் பணத்தை குப்பையில் தூக்கி எறிகிறீர்கள்.
சரி…இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!
பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடைவிதித்தாலும், நம் அன்றாட வாழ்வில் பாலிதீன் பைகள் இணைந்து விட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.
இப்போது இந்த பாலிதீன் பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து இயந்திரத்தில் போட்டு அரைத்து சிறுசிறு துகள்களாக ஆக்கி,பின்னர் வெப்பத்தில் உருக்கி ரோடு போட பயன்படுத்துகிறார் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

இப்போது…நாம் தூக்கி எறியும் இது போன்ற குப்பைகளின் மதிப்பு பற்றி பார்க்கலாம்.
  • தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
  • பிளாஸ்டிக்கில் ‘கடக்’ பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
  • நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.
  • சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
  • பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
  • தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.
  • பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
  • தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
  • வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.
  • பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.
  • பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
  • அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.
  • அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.
  • தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
  • நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
  • வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.
  • ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.
ஆக…இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.
இத்துடன் ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தி.
நீங்கள் ஏன் குப்பைகளை வீணாக ரோட்டில் எறியக்கூடாது? பேட்டரி செல், பெயிண்ட் டப்பாக்கள்,பினாயில் பாட்டில், பேனாரீபிள் உள்பட சில கழிவுகளை அபாயகரமான கழிவுகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.காரணம், இவை பூமியில் தூக்கி எறியப்படும் போது, மக்காமல் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது பால்பாயிண்ட் பேனாரீபிளில் பாலிவினைல் குளோரடு என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த ரசாயனம் மண்ணை கடுமையாக பாதிக்கிறது. நிலத்தடி நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.
வீட்டில் ப்யூஸ் ஆன டியூப்லைட்டுகளை குப்பையில் போடும் போது அதை சிறுவர்கள் டமார் என்று கல்லை தூக்கி போட்டு உடைப்பார்கள். இந்த ட்யூப்லைட்டை உடைக்கும் போது வெளிப்படும் பாதரசம் பூமியில் 300 அடி தூரம் வரை போகுமாம்.இந்த பாதரசம் செடி,கொடிகள்,பயிர்கள் வளர பூமியில் இருக்கும் நைட்ரஜன் சத்தை இல்லாமல் ஆக்கி விடுமாம்.
மக்களை பற்றி எதுவும் அக்கறை இல்லாத சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிரிஞ்ச் மூலம் ஊசி போட்டு விட்டு அந்த சிரிஞ்சுகளை அப்படியே குப்பையில போடுகிறார்கள். சில மோசமான குணம் கொண்ட தொழில் நபர்கள் இந்த வகையான பிளாஸ்டிகள் சிரிஞ்சுகளை வெப்பத்தில் எரித்து தண்ணீர் குடங்கள் செய்வது தான் கொடுமை.
இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தற்போது பெய்த மழையில் நகரின் பல சாக்கடைகள் அடைத்துக் கொண்டதால் த்ான் தண்ணீர் முறையாக வெளியேற வழியில்லாமல் இந்த குப்பைகள் அடைத்துக் கொண்டதும் ஒரு காரணம்.
ஆக…இனியாவது குப்பைகளை வீண் என்று தூக்கி எறியும் முன் ஒரு நொடி சிந்திப்ப்போம். இதை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்குங்கள். நாளை உங்கள் குழந்தை எதையும் வீணாக்க துணியாது. காசின் மதிப்பை எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க இதுவும் ஒரு ஐடியா!