Saturday 22 October 2011

C மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு




கணணி பயன்பாட்டில் சி என்னும் மொழி ஒன்றை உருவாக்கி நவீன கால கணணிப் பயன்பாட்டிற்கு அடித்தளம் அமைத்த கணணி விஞ்ஞானி டெனிஸ் ரிட்ச்சி சென்ற வார இறுதியில் காலமானார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து ஒரு வார காலத்திற்குள் இன்னொரு கணணி வித்தகர் மரணம் அடைந்துள்ளார். இவரும் புற்று நோயால் அவதிப்பட்டு தன் இல்லத்தில் அதற்கான சிகிச்சை எடுத்து வருகையில் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது. அக்டோபர் 8ல் காலமானது நேற்று தான் உலகிற்கு அவரின் நண்பரால் அறிவிக்கப்பட்டது.
சிலர் சரித்திரத்தை மாற்றி பெயர் பெறுவார்கள், சிலர் சரித்திரத்தை உருவாக்கிப் புகழ் பெறுவார்கள். ரிட்ச்சி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
நவீன கணணி பயன்பாட்டிற்கு பல புதிய கட்டமைப்புகளைத் தந்த ஆராய்ச்சி நிறுவனம் பெல் லேப்ஸ். இதன் உரிமையாளர் அலிஸ்டர் ரிச்சியின் மகனான டெனிஸ் ரிட்ச்சி, அதே ஆய்வுக் கூடத்தில் இணைந்து சி மொழியை உருவாக்கினார்.
இதன் கட்டமைப்பில் பின்னர் "சி ப்ளஸ் ப்ளஸ்' மற்றும் "சி ஷார்ப்' உருவாக்கப்பட்டது. இன்றைய பல ஓபரேட்டிங் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் சி மொழியை யே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. Java, JavaScript, Objective C and Cocoa, Python, Perl, and PHP ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
விண்டோஸ் இயக்கத்திற்கு முன் கணணியில் பெரும்பாலும் பயன்பட்டு வந்த யூனிக்ஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை டெனிஸ் ரிட்ச்சி, கென் தாம்ப்ஸன் என்ற தன் நண்பருடன் இணைந்து உருவாக்கினார்.
இன்றும் யூனிக்ஸ் சிஸ்டம் பெரிய நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்டர்நெட்டின் ஓபரேட்டிங் சிஸ்டமாக யூனிக்ஸ் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
"ஓப்பன் சோர்ஸ்என்னும் புதிய இயக்கம் கணணி அறிவியலில் தோன்ற இது ஒரு காரணமாகவும் அடிப்படையாகவும் அமைந்தது. இன்று உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து ஓபரேட்டிங் சிஸ்டங்களும், புரோகிராமிங் மொழிகளும், கூகுள் ஆண்ட்ராய்ட், ஆப்பிள் மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ்., ஜாவா ஸ்கிரிப்ட் - சி மொழி மற்றும் யூனிக்ஸ் சிஸ்டத்தின் அடிப்படை யில் உருவானவையே.
ரிட்ச்சி தன் நண்பர்களுடன் இணைந்து 1978ல் எழுதிய "சி புரோகிராமிங் மொழி' நூல் இன்னும் கணணி உலகின் பைபிளாகக் கருதப்படுகிறது.
இவரின் கணணி மொழி கண்டுபிடிப்பிற்காகப் பல விருதுகள் வழங்கப்பட்டன. 1999ல் அமெரிக்க அரசின் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
1941 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்து ஹார்வேர்ட் பல்கலையில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றவர் ரிட்ச்சி. தன் 30 ஆவது வயதில் யூனிக்ஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கினார். 2011 அக்டோபர் 8ல் காலமானார்.
கணணி உலகில் திருப்புமுனைகளை உருவாக்கியவர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேரில் ஒருவராக ரிட்ச்சி என்றும் எண்ணப்படுவார். அவருடைய உருவாக்கங்கள் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் என்பது உறுதி.