Sunday 16 October 2011

சத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்:

ஆசை, அடிதடி ஆகியவற்றுக்கு பிரன்ஹாஸ் மீன்கள் 3 சத்தங்களை எழுப்பி தகவல் தெரிவிப்பதாக பெல்ஜியம் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரின ஆராய்ச்சியாளர் எரிக் பார்மென்டீர்.
இவர் தனது ஆய்வகத்தில் பல வகை மீன்களை தொட்டியில் வளர்த்து அவற்றின் தகவல் பரிமாற்றம் பற்றி ஆராய்ந்தார். அவற்றில் பிரன்ஹாஸ் மீன்கள் தகவல் தொடர்புக்கு 3 விதமான சத்தங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடித்தார்.
இதுபற்றி எரிக் கூறியதாவது: மற்றவர்கள் கவனத்தை கவர சண்டையிடுவதைவிட சத்தம் எழுப்புவது குறைவான சக்தியை வெளியிடும் என்பதை விலங்குகள் அறிந்துள்ளன.
இணையை கவர்வதற்கு பல வகை மீன்கள் சத்தம் எழுப்புவது உண்டு. இனவிருத்திக்கு மீன்கள் சத்தம் எழுப்புவது அவசியமான அறிகுறி என இதன்மூலம் தெரிகிறது.
மீன்கள் எழுப்பும் சத்தத்தை புரிந்து கொள்வதன் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை அறிய முடிந்தால் கடலில் மீன்களை நம்பியுள்ள மீனவர்களுக்கு அதுபற்றி நாம் தெரிவிக்க முடியும்.
அதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. எனினும் ஆய்வகத்தில் பிரன்ஹாஸ் மீன்களின் தகவல் பரிமாற்றத்தை நீருக்கடியில் மைக்ரோபோன் பொருத்தி பொறுமையாக காத்திருந்து பதிவு செய்தோம்.
அதில் முதல் சத்தம் குரைப்பது போல இருக்கிறது. அது தனது வருகையை மற்ற மீன்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சண்டையிடுவதற்கு பதிலாக சத்தம் மூலம் மிரட்டுவதாக உள்ளது.
டிரம்ஸ் எழுப்பும் சத்தம் போல உள்ள அடுத்த 2 ஒலிகளை மீன்கள் ஒன்றையொன்று துரத்தும் போதும், கடிக்கும் போதும் எழுப்புகின்றன. பொதுவாக உணவுக்காக சண்டை நடக்கும்போது இதுபோன்ற சத்தம் எழுகிறது.