Monday 31 October 2011

வெற்றி நமதே!-ஆக். 31 கந்தசஷ்டி!

முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், “ஸுப்ரஹ்மண்ய’ என்பர். “ஸு’ என்றால் “உயர்ந்த’, “ப்ரஹ்மண்யம்’ என்றால், “இறைவன் அல்லது சத்திய சொரூபம்’ என்று பொருள். “உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்’ என்று பொருள் கொள்ளலாம்.
ஆம்… மனிதன் பிறக்கிறான். உலகத்திலுள்ள காட்சிகளைக் கண்டும், தன் வாழ்வில் நடப்பவற்றை நினைத்தும் பெருமைப்படுகிறான், சந்தோஷம் கொள்கிறான், கவலைப்படுகிறான். இப்படி, உணர்ச்சிக் கொந்தளிப்பாக வாழ்கிறான். இதைத்தான் ஆன்மிகம், “அஞ்ஞானம்’ என்கிறது. ஆனால், சத்திய சொரூபமான இறைவனை மறந்து விடுகிறான். அவன் தான் எல்லாவற்றுக்கும் அதிகாரி, இங்கே நாம் பிறக்கக் காரணமான அவனே, நம் இறப்புக்கும் காரணமாக இருக்கிறான். எனவே, எங்கிருந்து வந்தோமோ, அங்கே செல்வதற்கும், அவனுடைய உலகத்தில் பசி, தூக்கம், துக்கம் எதுவுமே இல்லாமல் நித்யானந்த வாழ்வு வாழ்வதற்கும் உரிய வழி வகைகள் பற்றி சிந்திப்பதே இல்லை. தற்காலிக வாழ்வுக்காக பல பாவங்களைச் செய்கிறான். இதனால், இறைவனின் கோபத்துக்கு ஆளாகி, பல பிறவிகளை எடுக்கிறான்.
எனவே தான், மகான்கள் பிறப்பற்ற நிலை வேண்டும் என்பதற்காக, பல பயிற்சிகளை மேற்கொண்ட னர். பிறவிப் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளில் சரணடையும்படி கூறினர்.
கஷ்யபர் என்ற முனிவருக்கு, இரண்டு மனைவியர். அவர்களுக்கு தேவ பிள்ளைகளும், அசுரப் பிள்ளைகளும் பிறந்தனர். தாய் வேறு என்பதால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அசுரப் பிள்ளைகளின் தலைவனான சூரபத்மன், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவபெருமானிடம், 108 யுகங்கள் வாழ, அவன் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பல கொடுமைகள் செய்தான்.
எனவே, சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். தன் வரத்தைத் தவறாகப் பயன்படுத்திய சூரபத்மனை அழிக்க, சிவன் முருகப் பெருமானையும், அவருக்கு உதவியாக நவவீரர்களையும் பிறப்பித்தார். நவவீரர்களின் தலைவனாக வீரபாகுவை நியமித்தார் முருகன். அவர்கள் துணையுடன், முருகப் பெருமான் சூரபத்மன் முன் வந்து நின்றார்.
முருகனைப் பார்த்ததுமே சூரபத்மனுக்கு ஞானம் வந்து விட்டது. நல்லவர் தரிசனம் நன்மையையே தரும் என்பதை இதன் மூலம் உலகத்துக்கு உணர்த்தினார். அவனுக்கு, பல நல்லுரைகளை எடுத்துரைத்தார் முருகர். பின், தன் மாயையால் அவற்றை மறக்கடித்து அவனை இருகூறாகப் பிளந்தார். ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி, தன் வாகனமாகவும், இன்னொரு பகுதியை சேவலாக்கி தன் கொடியிலும் ஏற்றார். இதன்மூலம் சூரனைக் கொல்லாமல் அவனை ஆட்கொண்டார்.
விநாயகர், கஜமுகாசுரனைக் கொன்றார். துர்காதேவி, மகிஷாசுரனைக் கொன்றாள். ராமன், ராவணனைக் கொன்றார். கண்ணன், கம்சனைக் கொன்றார். சிவன், திரிபுர அசுரர்களைக் கொன்றார். இப்படி தெய்வங்களால் அசுரர்கள் கொல்லப்பட்ட வரலாறைப் படித்திருக்கிறோம். முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்டார். அவனை தன் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றதில் இருந்து அவர் எதிரிக்கும் அருள் செய்யும் கருணைக் கடலானார். அதனால் தான், சுப்பிரமணியர் என்ற பெயரில் உயர்ந்த தெய்வமாக அவரை வணங்குகிறோம்.
ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், அம்மாத சஷ்டி சிறப்புக்குரியதாயிற்று. இந்நாளில், குழந்தை இல்லாத பெண்கள் விரதம் இருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி சஷ்டியில் துவங்கும் விரதத்தை தொடர்ந்து வரும் சஷ்டி திதிகளில் கடைபிடிப்பவர்கள், முருகப் பெருமானுடன் ஐக்கியமாகும் பாக்கியத்தைப் பெறுவர்.”ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே…’ என தினமும் ஒருமுறை சொல்லி, முருகனைப் பிரார்த்திப்பவர்கள், ஒரு கோடி முறை முருகனை வணங்கிய பாக்கியம் பெறுவர். “நமஸ்தே, போற்றி, ஜெய…’ என்ற பிரார்த்தனை வார்த்தைகளை, ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தினால், அது, கோடி முறை பயன்படுத்தியதற்கு சமம்.
வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வெற்றியல்ல. பிறப்பற்ற வாழ்வைப் பெறுவதே நிஜமான வெற்றி. அந்த வெற்றி நமதாக வேண்டுமானால், சுப்பிரமணியரின் திருவடியில் சரணடைவோம்.