Monday 31 October 2011

தீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு




தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ரோபோக்களையும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் ரோபோக்களையும் புனே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்து கொடுத்து வருகிறது.
இந்த மையத்தின் ஒரு பிரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியியல் அமைப்பு புனேயில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு ரோபோ தனது தலையில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியால் தீவிரவாதிகள சுட்டுக் கொல்லும் திறன் படைத்தது. சிறிய ரக துப்பாக்கி மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது.
கையெறி குண்டுகளை வீசக்கூடிய திறனும் இதற்கு உள்ளது. இரண்டாவது ரோபோ வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ஆற்றல் கொண்டது.
இந்த ரோபோக்களின் சோதனைகளும் முடிந்து விட்டன. அவற்றை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும். இந்த ரோபோக்களை வாங்குவதற்கு ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படைகள் ஆர்வம் காட்டியுள்ளன என்று புனே அமைப்பின் இயக்குனர் குருபிரசாத் கூறினார்.
தீவிரவாதிகள் பெரும்பாலும் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதுபோன்ற நேரங்களில் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுக்கும் போது உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
அதுபோன்ற நேரங்களில் இந்த ரோபோக்களை பயன்படுத்தினால் தீவிரவாதிகளை தேடிச் சென்று கொல்வதுடன் ராணுவத்துக்கு உயிர் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என விஞ்ஞானிகள் கூறினர்.