Wednesday 19 October 2011

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்